1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2017 (13:31 IST)

நயன்தாராவுக்காக விட்டுக் கொடுத்தாரா சிவகார்த்திகேயன்?

நயன்தாராவின் படத்துக்காக, தன்னுடைய படத்தின் ரிலீஸைத் தள்ளிவைத்தாரா சிவகார்த்திகேயன் என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படம் தொடங்கியபோது, விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு ரிலீஸ் என்றார்கள். ஆனால், திடீரென அஜித்தின் ‘விவேகம்’ அந்த தேதியில் அறிவிக்கப்பட, ஆயுத பூஜை விடுமுறைக்கு மாற்றி வைத்தனர்.

அதிலும் ஒரு சிக்கல். நயன்தாரா சொந்தக்காசைப் போட்டு எடுத்த படம் ‘அறம்’. கோபி நைனார் இயக்கியுள்ள இந்தப் படம் தயாராகி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால், போணியாகவில்லை. காரணம், நயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டோரா’ ஊத்திக் கொண்டதாலும், நயன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் என்பதாலும்தான்.

ஹீரோவே இல்லாத படத்தில், நயன் வந்தால்தானே கலெக்ஷன் பார்க்க முடியும்? இந்த உண்மையை யாரோ அவரிடம் எடுத்துச் சொல்ல, தன்னுடைய கொள்கையில் இருந்து இறங்கிவந்து, சன் டி.வி.யில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நயன். அதன்பிறகு வியாபாரம் ஆகியிருக்கிறது.

விநியோகஸ்தர்கள் விருப்பப்படும்போதே ரிலீஸ் பண்ணால்தான் ஆச்சு என்ற நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் ஒரே பிடிப்பு ஆயுத பூஜை விடுமுறை தான். ஒரே நாளில் நயன் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸானாலும் கலெக்ஷன் குறையும். எனவே, ‘வேலைக்காரன்’ படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயனிடம் கெஞ்சுவது போல் நயன் கொஞ்ச, அவரும் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொண்டாராம்.