1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 2 ஜூலை 2015 (10:23 IST)

ஒளிக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலிக்கு ரசூல் பூக்குட்டி, ஒப்பனைக்கு வீட்டா... அசத்தும் சிவ கார்த்திகேயன்

சிவ கார்த்திகேயனின் ஆரம்ப நாள்களில் அவருக்காக சினிமா கம்பெனிகளின் படியேறியவர், ஆர்.டி.ராஜா. சிவ கார்த்திகேயனின் படங்களை விளம்பரங்கள் மூலம் கடைசி ரசிகன்வரை கொண்டு சேர்த்ததில் ராஜாவின் பங்கு அதிகம்.
அவரது தயாரிப்பில் புதிய படம் நடிக்கிறார் சிவ கார்த்திகேயன். தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், 24 ஏஎம் ஸ்டுடியோஸ். ராஜாவின் பெயரில் இருந்தாலும் இது சிவ கார்த்திகேயனின் சொந்த நிறுவனம் என்று கிசுகிசுக்கிறார்கள்.
 
சுந்தர் சி., அட்லி போன்றவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த பாக்யராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்குகிறார். மிகப்பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.
 
ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம், ஒலியமைப்புக்கு ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி, கலைக்கு டி.முத்துராஜ், இசைக்கு அனிருத் என்று தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படா படா ஆள்கள். ஒப்பனைக்கு ஐ யில் பணியாற்றிய வீட்டா ஷான் ஃபுட்டை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதேபோல் சண்டைக் காட்சிகளை அமைக்க வெளிநாட்டு கலைஞர்களை வரவைக்கிறார்கள்.
 
நேற்று இந்தப் படத்தின் தொடக்க விழா நடந்தது. அப்போது பேசிய ராஜா, ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவது எனக்கு பெருமை. 
 
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயம் இல்லை என்றார்.