1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Updated : வியாழன், 22 ஜூன் 2017 (15:42 IST)

ஜோதிகா கூறும் தோசை கதையை எங்கிருந்து சுட்டார்கள் தெரியுமா?

சமீபகாலங்களில் தமிழ் படங்களில் பல காட்சிகள் ஆங்கில படங்களில் சுடப்பட்டதாகத்தான் இருக்கும். அதற்கு இயக்குனர்கள் கொடுக்கும் விளக்கம் இன்ஸ்பிரேசன். கதை, காட்சிகள் என்ற நிலை போய் தற்போது படத் தலைப்பிற்கே பஞ்சம் வந்துள்ளது.


 

இந்த நிலையில் ஜோதிகா தற்போது நடித்து வெளிவர தயாராக உள்ள படம் மகளிர் மட்டும். பிரம்மா இயக்கியுள்ள இந்த படத்தின் டீஸர் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த டீஸரில், வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருநாளில் எத்தனை தோசை சுட்டுத் தரப்படுகிறது என்று கணக்கு செய்ய தொடங்கி வாழ்நாள் முழுக்க ஒரு பெண் தன் குடும்பத்திற்காக மூன்று லட்சம் தோசை சுட்டுத் தருகிறாள் என்று கூறுவதாக இருக்கும். ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்த அந்த டீஸரின் மூலக்கரு இயக்குனரோ அல்லது அந்த படம் தொடர்பானவர்களின் சொந்த உருவாக்கமாக இருக்கும் என்று நினைத்திருந்த வேலையில், அந்த தோசை பார்முலாவை எங்கிருந்து ஆட்டையை போட்டார்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இது தொடர்பாக அவரது பக்கத்தில் பதிவிட்டிருக்கும் செய்தி இதோ உங்கள் பார்வைக்கு...


 

ஒரு நண்பர் கேட்டார் "வேற சினிமாலருந்தும் நாவல்லேர்ந்தும் அப்படியே சுட்டுட்டு இன்ஸ்பிரேஷன் அப்படின்னு சொல்லி தப்பிச்சிக்கிறாங்களே சில பேரு.. இது சரியா?'' "இன்ஸ்பிரேஷன் வேறு. காப்பி வேறு..இன்ஸ்பிரேஷன் தப்பே இல்லை. அப்படித்தான் கற்பனை விரிய முடியும். விளக்கமாகச் சொல்கிறேன்..
எழுத்தாளர் அ்ம்பை எழுதிய வீட்டின் மூலையில் ஒரு சமையலறை சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதையி்ல் ஹோம் மேக்கராக இருக்கும் ஒரு பெண் தன் வாழ்நாளில் குடும்பத்திற்காக எத்தனை தோசை ஊற்றுகிறார் என்று ஒரு கணக்கே போட்டு விரிவாக எழுதியிருப்பார். அதைப் படித்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது.

உடனே எனக்குள் ஒரு சிந்தனை ஓட்டம் நிகழ்ந்தது. வீட்டில் பெண்கள் மட்டும்தான் இப்படி லட்சக் கணக்கில் தோசை சுடுகிறார்களா? ஹோட்டல்களில் சரக்கு மாஸ்ட்டர்களும் லட்சக் கணக்கில் தோசை சுடுகிறார்களே என்று யோசனை விரிந்தது. குற்றாலத்தில் நான் வழக்கமாக டிஃபன் சாப்பிடும் ஒரு சின்ன கடையில் ஒரு சரக்கு மாஸ்டர் தொங்கும் கயிறைப் பிடித்துக்கொண்டு கல்லில் தோசை ஊற்றிக் கோண்டேயிருப்பார். அவர் நினைவிற்கு வந்தார். அவரை மைய்யப்படுத்தி அப்படியே மனதில் ஒரு கதை விரிந்தது. வாழ்நாள் முழுவதும் லட்சக் கணக்கில் தோசைகள் ஊற்றும் ஒரு மனிதன் ஒரு கட்டத்தில் பசிக்காக ஒரு தோசைக்கு கையேந்தும் நிலை ஏற்பட்டால்? என்று கேள்வி எழுந்தது.

ஆனந்த விகடனில் ஐம்பது லட்சம் தோசை என்று சிறுகதையாக எழுதினேன். இந்தக் கதைக்கு காரணமாக அமைந்தது அமபையின் சிறுகதையில் நான் படித்த அந்த தோசை மேட்டர்தான். ஆனால் இது வேறு கதை. இதுதான் இன்ஸ்பிரேஷன். அதே தோசைக் கணக்கை ஒரு குடும்பப் பெண் பேசுவது போல ஒரு சினிமா ட்ரைலரில் பார்த்தேன். இது இன்ஸ்பிரேஷன் அல்ல!" என்றேன்.

இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார்.