செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 மே 2018 (12:26 IST)

நடிகர்களே! இப்போது புறப்பட்டுவிடாதீர்கள்: கவிஞர் அறிவுமதியின் சாட்டையடி கவிதை

தூத்துகுடியில் கடந்த 100 நாட்களாக ஸ்டெர்லைட் ஆலைக்கு பொதுமக்கள் போராடி வரும் நிலையில் நேற்றைய போராட்டத்தில் 11 பேர்களின் உயிர்களும் பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தையும் அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர் என்றால் நடிகர்களும் இதனை தங்களது எதிர்கால அரசியலுக்கு பயன்படுத்தும்விதமாக டுவீட், அறிக்கையை விட்டு விளம்பரம் தேடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர்களுக்கு சாட்டையடி தரும் வகையில் கவிஞர் அறிவுமதி கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கவிதை இதுதான்
 
நடிகர்களே!இப்போது
புறப்பட்டுவிடாதீர்கள்
உங்களுக்கு
மூச்சத் திணறல் ஆகிவிடும்
எல்லாம் அடங்கட்டும்
இன்னும்தான்
தேர்தலுக்கு
நாளிருக்கிறதே!
நடிகர்களே!உங்கள்
அண்ணன்கள்
நன்றாக பேட்டி
கொடுத்துக் கொண்டு
பாதுகாப்பாக
இருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் அண்ணன்கள்தான்
செத்துக் கிடக்கிறார்கள்!
நடிகர்களே!உங்கள் மகள்கள்
பாதுகாப்பாக
படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களா?
பாதுகாப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்களா?
இருக்கட்டும்
எங்கள் மகள்கள்தான்
செத்துக் கிடக்கிறார்கள்!
நடிகர்களே!
இவர்கள் அரசியல் வேறு
உங்கள் அரசியல் வேறா?
இவர்களுக்கு சுடுகாடு!
உங்களுக்கு சட்டமன்றமா?
ஓ.. நாடாளுமன்றமுமா?
நல்லது நடிகர்களே!
கிளிசரினோடு
தேர்தல்
பிரச்சாரத்திற்குப்
புறப்படுமுன்
உங்கள் எசமானர்களிடம்
கேட்டுச் சொல்லுங்கள்..
எங்கள் உறவுகளின் சாவுக்காக
நாங்கள்
கொஞ்சம்
அழுது கொள்ள
அனுமதி கிடைக்குமா!!!
 
இந்த கவிதை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.