ரஜினியுடன் கருணாஸ் திடீர் சந்திப்பு... பரபரப்பு விளக்கம்
நேற்று நடிகர் ரஜினியை கருணாஸ் சந்தித்தார். சமீபத்தில் நிலவிய அரசியல் அசாதாரண சூழலில் வாக்களித்த மக்களுக்கு எதிராக கருணாஸ் பேசிய வார்த்தைகள் அவர்மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்ததால், அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பதை அறிய அனைவருமே ஆவல் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கருணாஸே அந்த சந்திப்பு குறித்து பேசினார்.
"ரஜினி சார் மீது எப்போதும் எனக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. அவரது பாட்ஷா படம் நாளை டிஜிட்டல் முறையில் வெளியாகிறது. இதற்கு வாழ்த்து சொல்வதற்காக அவரை சந்தித்தேன். எனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்த போது ரஜினி சார் எனக்கு போன் செய்து வாழ்த்தினார். இப்போது வெற்றி பெற்ற பிறகு அந்த மகிழ்ச்சியை தெரிவிப்பதற்காகவும் அவரை சந்தித்தேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. அரசியல் பற்றி அவரிடம் எதுவும் பேசவில்லை" என்றார்.
எப்போதோ வெற்றி பெற்றதற்கு இப்போது நன்றி சொல்லப் போனாராம்.
கமல் ட்விட்டரில் தெரிவித்துவரும் கருத்துகள் குறித்து கேட்டதற்கு, "கமல்ஹாசன் தெரிவிக்கும் கருத்து குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. என்னை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். சிலர் வேண்டும் என்றே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன்" என்றார்.
நேற்று ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்தின் பிறந்தநாள் என்பதால் இந்த சந்திப்பின் போது லதாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் கருணாஸ்.