வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (19:37 IST)

ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆர்யா தனது திருமணத்திற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சியாக கலர்ஸ் தொலைக்காட்சியில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவரே ஆர்யாவின் மனைவி ஆவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே பெண்கள் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது மதுரை மதிச்சியத்தைச் சேர்ந்த ஜானகியம்மாள் என்பவர் ஐகோர்ட்டில் இந்த நிகழ்ச்சிக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் விபரம் பின்வருமாறு:

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பங்கேற்கும் 18 இளம் பெண்களில் தனக்கு ஏற்ற மணப்பெண்ணை நடிகர் ஆர்யா தேர்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு நடனம், பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு போட்டிகள்நடத்தப்படுகின்றன. இது பெண்களின் மாண்பை சிதைக்கும் வகையில் உள்ளது.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் நடிகை சங்கீதா போட்டியில் பங்கேற்கும் பெண்களை தேர்வு செய்வது, நீக்குவது என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார். இது அரசியலமைப்பு சட்டத்தின் படி பாலியல் சமத்துவம் மீறலாகும். பெண்களை காட்சிப்பொருளாகக் காண்பிக்கின்றனர்.

பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி ஆண்களுக்கு நிகராக செயலாற்றி வரும் நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகள் பெண்கள் மீது தவறான கருத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்ச்சியை தொடர அனுமதித்தால் இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சூழல் ஏற்படும்.

எனவே பெண்களுக்கு எதிரான வன்முறையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிப்பதுடன், சேனல் தலைமைச் செயல் அலுவலர், நடிகர் ஆர்யா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகை சங்கீதா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்ட நீதிபதிகள், 'இந்த மனு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர், சினிமா தணிக்கை வாரிய தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழகின்  விசாரணை ஏப்ரல் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.