1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 21 மார்ச் 2024 (07:49 IST)

ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி' திரைப்படத்தில் - மஹானா

குமரன் சினிமாஸ் சார்பில் K.N.பூமிநாதன் தயாரிக்கும் படம் 'கங்கா தேவி'. ராகவா லாரன்ஸின் சீடரும் 'சண்டிமுனி' படத்தை இயக்கியவருமான மில்கா செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
 
ஹாரர், க்ரைம்  கலந்த திரில்லர் கதையாக இது உருவாகிறது
 
கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மஹானா நடிக்கிறார். 'கருமேகங்கள் கலைகின்றன', 'வரலாம் வா' உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார். 
 
யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
 'அட்டு' படத்தில்  நடித்த ரிஷி ரித்விக் கதாநாயகனாக நடிக்கிறார். நளினி முக்கிய வேடத்தில் நடிக்க ஆர்த்தி, கணேஷ் இருவருமே இந்த படத்தில் முதன்முறையாக கணவன் மனைவியாக இணைந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 
 
சூப்பர் சுப்பராயன், மொட்ட ராஜேந்திரன், மற்றும் சாய்தீனா ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
 
படம் குறித்து இயக்குநர் மில்கா செல்வகுமார் கூறும்போது,
 "ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. 
 
ஒரு ஜமீன் குடும்பத்திற்கு மருமகளாக வரப்போகும் பெண் அந்த வீட்டிற்குள் நுழைய, அடுத்தடுத்து பல பிரச்சினைகள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார் என்பதும் அதை ஜமீன் குடும்பத்தினரும் அந்த பெண்ணும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான் இந்த படத்தின் கதை.
 
 'நெஞ்சம் மறப்பதில்லை' பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி' படத்தில் ஹாரர், திரில்லிங், காமெடி என எல்லா அம்சங்களுமே கலந்து இருக்கின்றன" என்றார்.
 
வரும் தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததும் பழனி அருகே உள்ள நெய்க்காரன் பட்டியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதை அடுத்து பாலக்காடு அரண்மனை, குற்றாலம், ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
 
சென்னையில் ஒரு பாடல் காட்சிக்காக மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.