வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜனவரி 2019 (10:01 IST)

ரஜினியின் பெரிய மனுஷன்தான் கமலின் இந்தியன் ஆனது – இயக்குனர் ஓபன்டாக்…

கமலின் இந்தியன் 2 படப்பிடிப்பு இன்றுத் தொடங்கவுள்ளதை அடுத்து இந்தியன் படம் தொடங்கிய சுவாரசியமான தகவல்களை இயக்குனர் வசந்தபாலன் பகிர்ந்துள்ளார்.

இந்தியன் படத்தின் முதல் பாகம் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியாகி பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. அதையடுத்து 22 ஆண்டுகள் கழித்து இப்போது அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. கமலின் கடைசிப் படம் என்ற அறிவிப்போடு உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தியன் படத்தின் முதல்பாகம் 22 வருடங்களுக்கு முன்பு எப்படி உருவானது, ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையில் எப்படிக் கமல் வந்தார் என்ற சுவார்சியமான தகவல்களை இந்தியன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவரும் வெய்யில், அங்காடித் தெருப் படங்களின் இயக்குனருமான வசந்தபாலன் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.


வசந்தபாலனின் முகநூல் பதிவு:-
’நேற்று இணையத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு  நாளை துவங்க இருக்கிறது என்ற செய்தியைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.இந்தியன் தாத்தாவின் கத்திக்கு இரையாக  ஊழலும் லஞ்சமும்,வரிந்து கட்டிக்கொண்டு காத்திருக்கிறது.
என் குருவிற்கு வாழ்த்துகள்.

இந்த நேரத்தில் இந்தியன் 1 திரைப்படம் துவங்கிய தருணம்  ப்ளாஷ்பேக். ப்ளாஷ்பேக்குன்னு சொன்னவுடனே ,வேறு தளத்திற்கு தாவிவிடாதீர்கள். கொஞ்சம் வெயிட். sweet memories

ஜென்டில்மேன் திரைப்படத்தின் மும்மொழி வெற்றி  சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் ஷங்கர் சாரை அழைத்தார். 1994ம் ஆண்டு என்று நினைக்கிறேன். காதலன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு ஏதாவது கதையிருக்கா ஷங்கர் என்று ரஜினி சார் கேட்க பெரிய மனுஷன் என்ற தலைப்பில் ரஜினி சாருக்கான கதையை ஷங்கர் சார் உருவாக்கினார். உடனே அவரிடம் சொல்லப்பட்டது.அவர் மிக வியந்து பாராட்டினார். காதலன் திரைப்படம் முடியும் தருவாயில்  ரஜினி சாரின் பல படங்களின் கால்ஷீட் தேதிகள் இடிக்க , உடனே படம் செய்ய முடியாமல் போனது.காதலன் திரைப்படத்திற்குப் பிறகு  ஷங்கர் சார் பெரிய மனுஷன் கதையை தான் பண்ண வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.கதையில் கதாநாயனுக்கு 

தந்தை மகன் என்ற இரு வேடங்கள். ஆகவே ரஜினி சாருக்கு அடுத்து கமல் சாருக்கு அந்த கதை சொல்லப்பட்டது.பல்வேறு சந்திப்புகள் நிகழ்ந்தன.ஒருவேளை கமல் சார் நடிக்க மறுத்தால் என்ன செய்வது என்று எண்ணி பிளான் பி தயாரானது.

தெலுங்கு கதாநாயகர்கள் நாகார்ஜீனா அல்லது வெங்கடேஷ் அவர்களை மகனாக நடிக்க வைக்கலாம்.டாக்டர் ராஜசேகர் அவர்களை தாத்தா வேடத்தில் நடிக்க வைக்கலாம்.தெலுங்கு படமாக மாறிடுமே என்று கவலைப்பட்டோம். ஷங்கர் சாருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் இருக்கிறது என்ற சமாதான பேச்சும் உலா வந்தது.நமக்கு தெலுங்கு தெரியாது நம்மை கழட்டிவிட்டு விடுவார்கள் என்ற பயம் எனக்கு. கடவுளே எப்படியாவது கமல் சார் ஓகே சொல்லிவிடவேண்டும் என்று டைரக்டர்ஸ் காலனியில் உள்ள விநாயகரை வேண்டிக்கொண்டேன்.நடிகர் கார்த்திக் அவர்களை வைத்து துவங்கலாம் சத்யராஜ் அவர்களை தாத்தா கேரக்டர் என்று பலவிதமான யோசனைகளை நானும் இணை இயக்குநர்களும் வாரி வழங்கினோம்.ஒரு வழியாக கமல் சார் நடிப்பது முடிவானது.விநாயகர் கருணையால் நடந்தது என்று நான் நம்பி வெடலைத் தேங்காய் போட்டேன்.

இந்தியன் என்கிற டைட்டிலுக்கு முன் என்னென்ன டைட்டில்கள் விவாதிக்கப்பட்டன.இன்னொரு பதிவில் பார்க்கலாம்.’ எனக் கூறியுள்ளார்.