1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (11:34 IST)

இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம்

எந்திரன் படத்தின் கதைக்கு உரிமை கோரிய வழக்கில் சாட்சி அளிக்க நீதிமன்றத்திற்கு ஆஜராகாத இயக்குநர் ஷங்கருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்த எந்திரன்  படத்தின் கதை என்னுடையது. கடந்த 1996ஆம் ஆண்டு உதயம் என்ற பத்திரிகையில் ஜூகியா என்ற தலைப்பில் தொடர்கதை எழுதினேன். அந்த கதையை தனது அனுமதியை பெறாமல் இயக்குநர் ஷங்கர் எந்திரன் படமாக எடுத்துள்ளார். எனவே இதற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்க வேண்டும் எனக் கோரி  வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சி விசாரணைக்கு இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராகவில்லை. மேலும், படப்பிடிப்புக்காக இயக்குநர் ஷங்கர் வெளியூர் சென்றிருப்பதால், வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென்று அவர் தரப்பில் மனுதாக்கல்  செய்யப்பட்டது.
 
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் மீண்டும் கால அவகாசம் கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். மேலும்,  இயக்குனர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அபராத தொகையை புளூ கிராஸ் அமைப்பிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை செப்டம்பர் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.