1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 21 நவம்பர் 2020 (11:16 IST)

என் நண்பர்களுக்கு சூரரைப் போற்று பிடிக்கவில்லை – கேப்டன் கோபிநாத் டிவீட்!

சூரரைப் போற்று திரைப்படம் தனது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு அதிருப்தி அளித்துள்ளதாக கோபிநாத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக நேற்று வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறான சிம்ப்ளி ப்ளை ( தமிழில் வானமே எல்லை) என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேப்டன் கோபிநாத் இந்த படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘நேற்று இரவுதான் படத்தைப் பார்த்தேன். சில இடங்களில் சிரித்தேன். சில குடும்பக் காட்சிகளில் என்னை மறந்து அழுதேன். என் மனைவி பார்கவி கதாபாத்திரத்தை அபர்னா பாலமுரளி மிக சிறப்பாக நடித்திருந்தார். வளரத்துடிக்கும் தொழில்முனைவோரின் கதாபாத்திரத்தை சூர்யா சிறப்பாக நடித்திருந்தார். திரைப்படம் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. என் நூலின் நோக்கத்தை படம் சரியாக பிரதிபலித்துள்ளது. சுதா கொங்கராவுக்கு சல்யூட்’ எனக் கூறி இருந்தார்.

இப்போது அவர் தனது கிராம நண்பர்கள் மற்றும் டெக்கானில் பணியாற்றிய சில நண்பர்களுக்கு படம் எனது உண்மை வாழ்க்கையைக் காட்டவில்லை என அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் ‘அதில் புத்தகத்தில் உள்ளதை அப்படியே சொல்லி இருந்தால் அது ஆவணப்படமாக மாறியிருக்கும். அது வேறு வகை சினிமா. சூரரைப் போற்று மசாலாக்களுக்கு கீழே உணர்வுப்பூர்வமான ஆழமான விஷயங்கள் உள்ளன.’ எனத் தெரிவித்துள்ளார்.