இயக்குனர் கொலை மிரட்டல் - நடிகை புகார்
இப்போதைக்கு நடிகை சுஜிபாலா, இயக்குனர் ரவிக்குமார் மோதல் முடியும் என்று தோன்றவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர் தரும் புகார்களால் கிறுகிறுத்து போயுள்ளது திரையுலகம்.
காதல், நிச்சயதார்த்தம், தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சி என சுஜிபாலா, ரவிக்குமார் உறவு தமிழ் கமர்ஷியல் சினிமாக்களை மிஞ்சியது. அனைத்தும் அடங்கிவிட்டது என நினைத்த நேரம், ரவிக்குமார் தன்னை கன்னத்தில் அறைந்ததாக நடிகர் சங்கத்தில் சுஜிபாலா புகார் தந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ரவிக்குமார், சுஜிபாலா என் மனைவி. அவரை திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அவருக்கு பங்களா வாங்கித் தந்தேன், தோட்டம், கார் கூட வாங்கித் தந்தேன். கணவன் மனைவியை கண்டிக்கக் கூடாதா என்றார். அவரின் பேச்சுக்கு நேற்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மறுப்பு தெரிவித்தார் சுஜிபாலா.
தனக்கும், ரவிக்குமாருக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுவதை சுஜிபாலா மறுத்தார். ரவிக்குமார் திருமணம் நடந்ததாக பொய் சொல்கிறார். நான் சென்னை ராயப்பேட்டை நடனப்பள்ளியில் இருந்த போது அங்கு வந்து என்னை கை நீட்டி அடித்தார். அதுபற்றி நடிகர் சங்கத்தில் புகார் தந்திருக்கிறேன். போலீஸிலும் புகார் தர இருக்கிறேன் என்றார்.
ரவிக்குமார் சுஜிபாலாவுக்கு பங்களா, தோட்டம், கார் வாங்கித் தந்தது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர், ரவிக்குமார் அவ்வளவு வசதிப் படைத்தவராக இருந்தால் தனது உண்மை படத்தை வெளியிட்டிருக்கலாமே. அவர் எடுக்கும் படத்தின் பெயர்தான் உண்மை, சொல்வதெல்லாம் பொய் என்றார்.
ரவிக்குமாருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதாக பேட்டியின் போது கூறியவர், நான் மீண்டும் சினிமாவில் நடிப்பதும், தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்வதும் ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை. சினிமாவிலிருந்து என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார். எனக்கு கொலை மிரட்டல் விடுப்பதோடு என்னுடைய தொலைபேசியை ஒட்டு கேட்கிறார் என குற்றஞ்சாட்டினார்.
சுஜிபாலாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு நீண்ட பதிலறிக்கையை இந்நேரம் ரவிக்குமார் தயாரித்திருப்பார். யாராவது இவங்களுக்கு கவுன்சிலிங் நடத்தக் கூடாதா? குறைந்தபட்சம் ஒரு கடிவாளமாவது...?