1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : புதன், 4 ஜனவரி 2017 (18:59 IST)

ஏன் புறக்கணித்தார்கள் என்றே தெரியவில்லை - நடிகர் பிரஜின் பேட்டி

பிரஜின் பிரபல தொலைக்காட்சிகளில் நடிகராக வலம் வந்தவர். அலுவலக வேலைபோல போய் கைநிறைய சம்பளம் பெற்று  வாழ்ந்தவர். ஆனாலும் அங்கேயே தங்கி விடவில்லை. பறவைக்கு இறக்கை இருப்பது பறப்பதற்கே தவிர நடப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொண்டார். தன் இலக்கு சின்னத்திரை அல்ல பெரியதிரை என்று உணர்ந்து கொண்டார். திரைவாய்ப்புகள்  தேடத் தொடங்கினார். இன்று ஒருபடத்தின் முழு நாயகனாக நிற்கிறார்.


 
 
உங்கள் திரைவாழக்கை பற்றி சொல்லுங்கள்?
 
என் முதல் படம், சாபு த்ரீ அந்தப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. அடுத்து, தீ குளிக்கும் பச்சைமரம். அது மது அம்பாட்  இயக்கிய படம். 2012 இல் வெளியானது மார்ச்சுவரி, பிணம் என்று வித்தியாசமாக நகரும் கதை. அந்தப்படம் பரவலான  பாராட்டைப் பெற்றது.. ஆனந்தவிகடன் 43 மார்க் கொடுத்தது. படத்துக்குப் பெரிய விளம்பரம் இல்லை என்றாலும் விருதுகள்  நிறைய வந்தன. அது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. சீனுராமசாமி, சமுத்திரக்கனி, அறிவழகன் போன்ற இயக்குநர்கள்  என்னைப் பாராட்டிய படம்.
 
சமீபத்தில் வெளிவந்த வண்ணாரப்பேட்டை படம் பற்றி சொல்லுங்க?
 
நான் நடித்த படங்களுக்கு சரியான விளம்பரம் இல்லாததால் பெரிதாகப் போகவில்லை. ஆனால் இதற்கெல்லாம் முன்னாடி 2010  இல் ஒப்பந்தமான படம்தான் பழைய வண்ணாரப்பேட்டை. படம் பல்வேறு தடைகளால் தாமதமாகிக் கொண்டே வந்தது.  இப்போது வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஓரே ஆண்டில் முடியும் என்று நினைத்தோம். காலம் நீண்டுவிட்டது.
 
பட அனுபவம் பற்றி சொல்லுங்க...?
 
24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரே தோற்றம், ஒரே உடைதான் வர வேண்டும். அதனால் என் எடை 73  கிலோவை பல ஆண்டுகளாக பராமரித்தேன். தாடியுடன் இருந்ததால் வேறு படங்களிலும் நடிக்க முடியாது. இப்படி பல  சிரமங்களை எதிர்கொண்டு முடித்த படம் பழைய வண்ணாரப்பேட்டை.
 
பழைய வண்ணாரப்பேட்டை பட ஆடியோ விழாவில் விழாவுக்கு அழைத்த யாரும் வரவில்லையே என்று கண்ணீர் சிந்தி  வருத்தப்பட்டீர்களே..?
 
அது வருத்தமான ஒன்றுதான். நாங்கள் விழாவுக்கு எல்லாரையும் முறைப்படி சம்மதம் பெற்று விட்டுத்தான் அழைப்பிதழில்  பெயர் போட்டோம். அப்படியே முறைப்படி அழைத்தோம். ஆனால் யாரும் வராதது பெரிய வருத்தம். அந்த அதிர்ச்சியிலிருந்து  மீள பலநாள் ஆனது. ஏன் அப்படிப் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை. இதே விழா பெரிய நடிகர் சம்பந்தப்பட்டது  என்றால் வராமல் இருப்பார்களா? 5 ஆண்டுகள் போராடி ஒரு படம் எடுத்தோம். அப்படிப்பட்ட படத்தின் விழாவுக்கு வராமல் ஏன்  அப்படிப் புறக்கணித்தார்கள் என்று தெரியவில்லை
 
வெளிமாநிலப் படங்களில் நடிக்கிறீர்களா?
 
நான் டிவி யிலிருந்து வெளியே வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் இதுவரை 3 படங்கள் வந்துள்ளன. இடையில்  மலையாளத்தில் 4 படங்கள் நடித்தேன். பிருத்திவிராஜ், லால் படங்களும் அதில் அடங்கும்.
 
உங்கள் மனைவியும் ஒரு நடிகை. இது உதவியாக உள்ளதா?
 
நான் 2007 ல் திருமணம் செய்து கொண்டே்ன் என் மனைவி ஒரு சின்னத்திரை நடிகை. அவர் என்னையும் என் இலக்கையும்  புரிந்து கொண்டிருப்பதால் ஆதரவு தந்து பக்கபலமாக இருந்தார். இது சாதாரண விஷயமல்ல.
 
இப்போது நடித்து வரும் படங்கள் பற்றி?
 
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் வெளிவரத் தயாராக இருக்கிறது. இதை தயானந்தன் இயக்கியிருக்கிறார். இவர்  சீனுராமசாமியின் உதவி இயக்குநர். இன்னொரு படம் மிரண்டவன். அதை இயக்கியிருப்பவர் முரளி கிருஷ்ணா. இப்படமும் வெளிவரத்தயாராக இருக்கிறது. தாமிரா இயக்கும் ஆண்தேவதை படத்தில் 2 வது நாயகனாக நடிக்கிறேன். சமுத்திரக்கனி  சார்தான் நாயகன். அவர்தான் என்னை டிவியில் அறிமுகப்படுத்தியவர். அவருடன் நடிப்பதில் மகிழ்ச்சி. பேசும் போதே நம்பிக்கை  தருபவர் அவர்.