வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : சனி, 13 ஜூன் 2015 (12:48 IST)

தமிழில் ஒரு ஸ்லம்டாக் மில்லியனர் - ஒரு குப்பை கதை படத்தின் இயக்குனர் பேட்டி

படத்தின் பெயர், படத்தின் முதல் காட்சி எல்லாம் மங்களகரமாக இருக்க வேண்டும் என்று முன்பு பார்த்து பார்த்து வைத்தார்கள். மங்களகரமாக பெயர் வைத்தால், தொடக்க காட்சியை அமைத்தால் படம் வெற்றிபெறும் என்று நம்பிக்கை. அந்த சென்டிமெண்டை இப்போதைய இயக்குனர்கள் அடித்து நொறுக்குகிறார்கள். எதிர்மறைதான் இவர்களின் இலக்கு. வாழ்க்கை எதிர்மறையைதான் அதிகம் கற்றுத் தருகிறது. காளி ரங்கசாமியின் படத்தின் பெயர், ஒரு குப்பை கதை.
ஏன் இப்படியொரு பெயர்?
 
ஒரு குப்பையான விஷயத்தை பெரிதுப்படுத்தினால் அது வாழ்க்கையில் எவ்வளவு தூரம் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் கதை. புதுமண தம்பதி இருவரிடையே எழும் ஒரு சிறு பிரச்சினையின் தொடர்ச்சி, வளர்ச்சி, முடிச்சு, அதிர்ச்சி, விளைவு, முடிவு என திரைக்கதை பயணிக்கிறது.
 
படத்தின் நாயகன், நாயகி மற்றும் பிற நடிகர்கள்...?
 
பல படங்களில் நடன இயக்குனராகப் பணிபுரிந்த தினேஷ் மாஸ்டர்தான் இதில் நாயகன். வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் படங்களில் அசாதாரண முகம் காட்டிய மனிஷா யாதவ்தான் நாயகி. காமெடிக்கு யோகிபாபு. நாயகனின் அம்மாவாக ஆதிரா வருகிறார். மற்றபடி பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். சிறு சிறு வேடங்களில் தலை காட்டிய பலர், இதில் தலையாய பாத்திரங்கள் சுமந்துள்ளனர்.
 
காளி ரங்கசாமி... உங்க பெயரே தனித்துவமா இருக்கே, எப்படி?
 
என்னுடைய இயற்பெயர் ரபோனி கண்ணன். அம்மா காளியம்மாள் அப்பா ரங்கசாமி இரண்டு பெயர்களையும் இணைத்து காளி ரங்கசாமின்னு பெயர் வைத்துக் கொண்டேன்.
 
படத்தின் தயாரிப்பாளர் அஸ்லம் பற்றி...?
 
அமீர், சேரன், ராதாமோகன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிறகு அவர், பாகன் படத்தை இயக்கினார். அதில் நான் இணை இயக்குனர். என்னுடைய 15 ஆண்டுகால நண்பர். அந்த நட்பில் இந்தப் படத்தை அவர் தயாரிக்கிறார்.

எங்கு படப்பிடிப்பு நடத்தினீர்கள்?
 
சென்னைதான் கதைக்களம். குறிப்பாக அடித்தட்டு குடிசைப் பகுதியில் கதை நடப்பதால் கூவம் நதிக்கரையோரம்தான் பெரும்பகுதி படப்பதிவு நடந்தது.

பிரபலமான பல்லவன் நகர், சிந்தாதிரிப்பேட்டை குப்பங்களிலும் படமாக்கியிருக்கிறோம். சென்னையின் பல அழுக்கான பகுதிகளும் படத்தில் அழகாக இடம் பெற்றுள்ளன.
இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன?
 
இது ஒரு ஏழைப் பையன் மற்றும் பெண் சார்ந்த வாழ்க்கை. நிஜமான ஒருவரின் வாழ்வில் நடந்ததையே கதையாக்கியுள்ளேன். நாயகன் முனிசிபாலிடியில் வேலை பார்ப்பவன். நாயகி வெளியூர் மலையூரிலிருந்து சென்னைக்கு வந்திருப்பவள். படத்தில் ஏழ்மை வருகிறது. ஆனால் படம் அது பற்றி பேசவில்லை.

வாழ்க்கை பற்றியே பேசுகிறது. கதை அழுக்கான மக்கள் பற்றியதாக இருந்தாலும் காட்சிகள் அழுத்தமானதாக இருப்பதால் ரசிக்க வைக்கும்படி இருக்கும். முக்கியமாக, தமிழில் இது ஒரு, ஸ்லம் டாக் மில்லியனர் என்று பேசும் வகையில் யதார்த்தப் பதிவாக இருக்கும்.