சகலகலா வல்லவன் இன்று வெளியாகியுள்ளது. ரோமியோ ஜுலியட் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகும் படம். காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. படம் குறித்தும், உடன் நடித்தவர்கள் குறித்தும் ஜெயம் ரவி மனம் திறந்து பேசினார்.
சுராஜ் இயக்கத்தில் நடிக்க என்ன காரணம்?
சுராஜ் சாருக்கு நான் ஃபேன். அவருடைய காமெடிக்கு நான் பெரிய ஃபேன். அவர் நகைச்சுவை சார்ந்து படங்கள் பண்ணியிருக்கார். அது எவ்வளவு பெரிய ஹிட்டாகியிருக்கு அப்படீங்கிறது எல்லாருக்குமே தெரியும். சோ, அந்த மாதிரி ஒரு படம் பண்ணணும்னுதான் ஆசைப்பட்டேன்.
முதல் முதலில் இந்தப் படத்தின் கதையை கேட்டபோது என்ன தோன்றியது?
நான் கதை கேட்கும் போது எப்போதுமே சீரியசாகதான் கேட்பேன். மத்தவங்க சொல்லியிருக்காங்க. ஏன் சார் சீரியசா கதை கேட்கிறீங்கன்னு. ஆனா, சுராஜ் சார் டயலாக்கோட கதை சொன்னப்ப, ஒவ்வொரு சீனுக்கும் சிரிச்சுகிட்டே கதை கேட்டேன். அந்த மாதிரி நான் கதை கேட்டதே கிடையாது. உடனே நான் விருப்பப்பட்டு, சார் இந்தப் படம் பண்ணலாம்னு உடனே ஆரம்பிச்சோம்.
படத்திள் ஒளிப்பதிவாளர் யுகே.செந்தில்குமாரின் சிறப்பு என்ன?
யு.கே.செந்தில் குமார் பாஸ்ட் வொர்க்கர். நானும், த்ரிஷாவும் பேசினாலே, கொஞ்சம்கூட அவருக்குப் பிடிக்காது. ஷாட் முடிஞ்சு போய் உட்கார்ந்து, த்ரிஷா நிறைய கதை சொல்வாங்க அவங்ககிட்ட கேட்கலாம்னு போனா, ஷாட் ரெடின்னு சொல்லிடுவார். அந்தளவுக்கு பாஸ்ட்.
த்ரிஷாவுடன் இது உங்களுக்கு 3 -வது படம்...?
த்ரிஷாகூடவே படங்கள் பண்றீங்கன்னு நிறைய பேர் கேட்கிறாங்க. உண்மையாகவே எனக்குப் பிடிக்கும் த்ரிஷாவை. அதுல என்ன தப்பு. வொண்டர்ஃபுல் ப்ரெண்ட். அவ்வளவு ஈஸியா சிச்சுவேஷன்ஸை ஹேண்டில் பண்றாங்க. நம்மால எல்லாம் முடியாது. அதுக்கு அழகான ரீஸனையும் அவங்க சொன்னாங்க. அதெல்லாம் உண்மையாகவே நான் பார்த்து வியந்த விஷயங்கள்.
படத்தில் அவங்க கதாபாத்திரம், அவங்க நடிப்பு...?
இந்தப் படத்துல சூப்பரா பண்ணியிருக்காங்க. அவங்க கதாபாத்திரம் பேசப்படும். பதினொரு பன்னிரெண்டு வருஷம் ஒண்ணாதான் ட்ராவல் பண்ணியிருக்கோம். அவங்க படங்களெல்லாம் பார்த்திருக்கேன். அவங்களே சொன்னாங்க, இந்த மாதிரி கதாபாத்திரம் இதுவரை தமிழ்ல பண்ணலைன்னு. சோ, அது எல்லாருக்குமே புதுசா இருக்கும்.
அஞ்சலி பற்றி...?
நான் நிறையமுறை சொல்லியிருக்கேன். மத்த ஹீரோயின்ஸ் பத்து கமர்ஷியல் படம் பண்ணுனா ஒரு எக்ஸ்பரிமெண்ட் படம் பண்ணுவாங்க. அஞ்சலி பத்து எக்ஸ்பரிமெண்ட் படம் பண்ணுனா ஒரு கமர்ஷியல் படம் பண்ணுவாங்க.
அஞ்சலி பிரச்சனையில் இருந்த நேரம், அவரை படத்தில் எப்படி ஒப்பந்தம் செய்தீர்கள்?
இந்தப் படத்தில் அவங்க நடிச்சா நல்லாயிருக்கும்ணு நான்தான் சொன்னேன். ரொம்ப க்யூட்டா எல்லாருக்கும் புடிச்ச மாதிரி பண்ணியிருக்காங்க.
சூரியின் காமெடி படத்தில் எந்தளவு வந்திருக்கிறது?
எல்லாத்துக்கும் மேல நான் சொல்ற உண்மை, சூரி இந்தப் படத்துல அடுத்த காமெடி சூப்பர் ஸ்டார் ஆயிடுவார். அந்தளவுக்கு பண்ணியிருக்கார். இந்தப் படத்துல பிப்டி பர்சன்ட் அவர்தான். மத்த பிப்டி பர்சன்ட்தான் நாங்க எல்லாரும். அந்தளவுக்கு கலக்கியிருக்காரு.
படம் எதைக் குறித்து பேசுகிறது?
இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு கணவன் மனைவி சேர்ந்து வாழ்ந்தாலே கூட்டு குடும்பம் என்பார்கள். இன்று திருமண அமைப்புகள் மீது ஊசலாட்டம் இருக்கிறது. அவநம்பிக்கை நிலவுகிறது. விவாகரத்துகள் நடக்கின்றன.அதற்கு இதில் நல்ல பதில் சொல்லப்பட்டு உள்ளது. நமது பலம் திருமணம், குடும்பம் என சொல்லப்பட்டு உள்ளது.