1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinothkumar
Last Updated : ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (13:29 IST)

இந்தியா வரும் விமானத்தை தவற விட்ட டூ பிளஸ்சி – டிவிட்டரில் புலம்பல் !

இந்தியாவில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்தியா வர இருந்த டூ பிளஸ்சி விமானத்தை தவறவிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இப்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் பின் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. டெஸ்ட் அணியின் கேப்டனான டூ பிளஸ்சி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்காக துபாய் செல்லும் விமானத்தினை முன்பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த விமானம் நான்கு மணிநேரம் தாமதமாக வந்ததால் அவர் துபாயில் இருந்து இந்தியா செல்லும் இணைப்பு விமானத்தைத் தவறவிட்டுள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘4 மணிநேர தாமதத்துக்குப் பின் துபாய் செல்லும் பிரிட்டீஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருக்கிறேன். இதனால் இந்தியா செல்லும் விமானத்தைத் தவறவிடப் போகிறேன். இனி எனக்கு அடுத்த விமானம் 10 மணிநேரத்துக்குப் பிறகுதான். எனது கிரிக்கெட் கிட்கள் இன்னும் வரவில்லை. எனது விமானப் பயணத்திலேயே மோசமான பயணம் இதுதான். எல்லாமே தவறாகச் சென்றுவிட்டது.’ எனப் புலம்பியுள்ளார்.