1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (11:20 IST)

கொல்கத்தா பகலிரவு போட்டியில் தோனி – வரிசைகட்டும் ஜாம்பவான்கள் !

கொல்கத்தாவில் நடக்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்கள் வர்னனையாளர்களாக பங்கேற்க உள்ளனர்.

இந்தியா வந்துள்ள வங்கதேசம் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  தற்போது டி 20 போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அடுத்ததாக டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக பிங்க் பந்தில் நடக்கிறது. இந்திய அணி விளையாடும் முதல் பகலிரவு போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் மறக்க முடியாத ஒன்றாக மாற்ற,  இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து அவர்களை வர்னனை செய்ய வைக்கப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனம் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் அனுமதி கோரியுள்ளது. இதன்படி முன்னாள் கேப்டன்களான கவாஸ்கர், சச்சின், கங்குலி, கபில்தேவ், டிராவிட், தோனி உள்ளிட்டோர் தங்கள் தலைமையின் கீழ் நடந்த மறக்க முடியாத சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.  அதன் பிறகு அவர் ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். உலகக்கோப்பைக்கு பிறகு எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தனது பங்களிப்பை செலுத்த இருக்கிறார். இந்நிலையில் அவர் மீண்டும் சர்வதேசப் போட்டி ஒன்றில் கலந்துகொள்வதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.