வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:27 IST)

ஒரு ரன்னில் இரட்டைச் சதத்தை நழுவவிட்டு வருந்திய இந்திய வீரர்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்தது.


 

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தாலும், 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்நிலையில், 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அபாரமாக ஆடிய மொய்ன் அலி 146 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 321 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்தது.

இதனால், இங்கிலாந்து அணி 400 ரன்களை எட்டாது என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், லியம் டாவ்சன் - அடில் ரஷித் இணை இந்த கனவை தகர்த்தெருந்தது. அபாரமாக ஆடிய இந்த ஜோடி 108 ரன்கள் குவித்தது.

இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் ஒரு விக்கெட் மட்டும் வீழ்த்தினார்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஜோடிகளான கே.எல்.ராகுல்-பார்த்திவ் படேல் இணை 152 ரன்கள் குவித்தது. பார்த்திவ் படேல் 71 ரன்கள் குவித்தார். பின்னர் புஜாரா (16), விராட் கோலி (15) என அடுத்தடுத்து வெளியேறினர்.

இதற்கிடையில் அற்புதமாக ஆடிய கே.எல்.ராகுல் சதத்தினை பதிவு செய்தார். பின்னர் கே.எல்.ராகுல் உடன் கருண் நாயர் இணைந்தார். இந்த ஜோடி இங்கிலாந்தின் தாக்குதலை நேர்த்தியாக எதிர்கொண்டது.

சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் துரதிர்ஷ்டவசமாக 199 ரன்களில் வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. கருண் நாயர் 71 ரன்களுடனும், முரளி விஜய் 17 ரன்களுடனும் இருந்தனர்.