வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : வெள்ளி, 7 நவம்பர் 2014 (08:47 IST)

கமல் 60

கமலுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள். அவரது சாதனையை, மனவோட்டத்தை, நண்பர்களை, வெற்றிகளை சொல்லும் அறுபது செய்திகளின் சிறப்பு தொகுப்பு உங்களுக்காக.
 
1. 25 வருடங்களுக்குப் பிறகு கமல் நடித்த மூன்று படங்கள் - உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகியவை ஒரே வருடத்தில் (2015) வெளிவர இருக்கின்றன.
2. வட்டார வழக்கை அட்சர சுத்தமாக பேசி நடிக்கிறவர் கமல் மட்டுமே. சென்னை, கோவை, இலங்கை தமிழைத் தொடர்ந்து இப்போது பாபநாசத்தில் நெல்லைத் தமிழ் பேசி நடிக்கிறார்.
 
3. கமலின் முதல் படம் களத்தூர் கண்ணம்மாவில் அவர் நடிக்க காரணமாக இருந்தவர் கமலின் குடும்ப மருத்துவர். அவர்தான் கமலின் சூட்டிகையைப் பார்த்து ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கமலை அறிமுகப்படுத்தியவர்.
 
4. குழந்தை நட்சத்திரமாக அன்றைய முன்னணி நடிகர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் மூவருடனும் கமல் நடித்துள்ளார்.
 
5. மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் ஆகிய படங்களுக்காக மூன்றுமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.
6. சக கலைஞர்களுடன் எப்போதும் நட்பு பாராட்டுகிறவர் கமல். கேன்சரால் பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீவித்யா யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. அவர் சந்திக்க விரும்பிய சந்தித்த ஒரே சக கலைஞன் கமல் மட்டுமே.
 
7. தான் ரசித்த மூத்த கலைஞர்களுக்கு தனது படத்தில் வாய்ப்புதர கமல் பெரிதும் ஆர்வம் காட்டுவார். சிவாஜி, நாகேஷ், காகா ராதா கிருஷ்ணன், ஜெமினி கணேசன் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
 
8. தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய முதல் இந்திய நடிகர் கமல்ஹாசன்.
 
9. ரஜினியும் கமலும் இருவேறு ஸ்டைலை கொண்டவர்கள் என்பதாலும், வர்த்தக ரீதியாக சில பாதிப்புகள் இருப்பதாலும் இருவரும் இனி சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்தவர் கமல்ஹாசன். இதுவரை இருவரும் அதனை காப்பாற்றி வருகிறார்கள்.
 
10. கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி.
11. கமல்ஹாசன் இதுவரை பல மொழிகளில் 19 ஃபிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அதிக ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற நடிகர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
 
12. தணிக்கை மீது கமலுக்கு கடுமையான விமர்சனம் உண்டு. வயது முதிர்ச்சியை மட்டுமே முக்கிய யோக்கியதாம்சமாகக் கொண்டு தணிக்கை கமிட்டி அமைக்கக் கூடாது. மன முதிர்ச்சி, ரசனை, சமுதாய நோக்கு ஆகியவற்றுக்குதான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பது கமலின் கருத்து.
 
13. களத்தூர் கண்ணம்மா படப்பிடிப்பில் மாங்காய் சீசன் இல்லாததால் செயற்கை மாங்காய்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை தெரியாமல் சாப்பிட முயன்றிருக்கிறார் கமல். பிறகு எடுத்த சாவித்திரி உப்புமா ஊட்டும் காட்சியில் உப்புமாவை வாயில் அடக்கிக் கொண்டவர் அதுவும் செயற்கை உப்புமாவாக இருக்கும் என்று காட்சி முடிந்ததும் துப்பியிருக்கிறார். அதற்கு அவர் சொன்னது, செட் உப்புமா.
 
14. மலையாள நடிகர்களில் கமலின் நெருங்கிய நண்பர் நடிகர் சோமன். சோமனை குறித்து கேரளா சினிமா மேடைகளில் கமல் கூறியிருக்கிறார். சோமன் மறையும்வரை இவர்களின் நெருக்கமான நட்பு தொடர்ந்தது.
 
15. கமல் இதுவரை ஐந்து மொழிகளில் 70 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.
 
16. குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல் இளைஞனான பிறகு பாலசந்தரிடம் அவரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவர் ஜெமினி கணேசன். அப்போது பாலசந்தர் சொன்ன வார்த்தை, சொல்லி அனுப்பறேன்.
 
17. டைம் பத்திரிகை வெளியிட்ட ஆல் டைம் 100 படங்களின் பட்டியலில் கமலின் நாயகன் படமும் ஒன்று.
 
18. பார்த்தால் பசி தீரும், பாத காணக்கை, ஆனந்தஜோதி, வானம்பாடி... இவையெல்லாம் களத்தூர் கண்ணம்மாவுக்குப் பிறகு கமல் குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்கள்.
 
19. நறுக்குத் தெறித்தாற்போல விழும் கமலின் கமெண்ட்கள் பிரபலமானவை. இந்தியன் படம் வெளிவந்த போது, 70 வயது கிழவராக நீங்கள் நடித்திருக்க வேண்டுமா? 70 வயது கிழவரையே நடிக்க வைத்திருக்கலாமே என்று கமலிடம் கேட்கப்பட்டது.

அடுத்த நொடி கமல் சொன்ன பதில், ஒரு மேஜிக் நிபுணர் வெறும் கையில் முட்டையை வரவழைக்கிறார். இதில் முட்டையில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனா வெறுங்கையில் அதை வரவழைக்கிறார் பாருங்க... அதுதான் விஷயமே. அதேமாதிரிதான் 70 வயசு கிழவர் கிழவரா நடிக்கிறதில் என்ன இருக்கிறது. கிழவரில்லாத நான் கிழவராக நடிச்சதுதான் விசேஷம்.
 
20. கமலுக்கு முதல் ஃபிலிம்பேர் விருது கிடைத்தது மலையாளப் படம் கன்னியாகுமரிக்காக. தமிழில் முதல் ஃபிலிம்பேர் விருது வாங்கித் தந்த படம் அபூர்வ ராகங்கள்.

21. பாலுமகேந்திரா, பாரதிராஜா இவருவரின் முதல் படங்களின் ஹீரோ கமல்ஹாசன். பாலுமகேந்திராவின் முதல் படம் 1977 ல் கன்னடத்தில் வெளிவந்த கோகிலா. பாரதிராஜா 16 வயதினிலே.
 
22. 1978 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிப் படங்கள் நூறு நாட்கள் ஓடி சாதனைப் படைத்தன. ஒரே வருடத்தில் ஐந்து மொழிகளில் நூறு நாட்கள் படம் தந்த ஒரே நடிகர் - உலக அளவில் கமல் மட்டுமே.
23. கமல் இரண்டு பள்ளிகளில் படித்தார். ஒன்று தி.நகரிலுள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் கான்வென்ட், இன்னொன்று திருவல்லிக்கேணி ஹிண்டு ஹைஸ்கூல்.
 
24. மனிதனின் தேவை, வாய்ப்பு, சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரின் செக்ஸ் வாழ்க்கை அமைகிறது. செக்ஸிற்கு அனாவசியமான அடைமொழிகள் போட்டுக் குறிப்பிட நான் விரும்பவில்லை - செக்ஸ் பற்றி கமல் சொன்னது.
 
25. முறையாக நாட்டியம் பயின்று அரங்கேற்றம் செய்தவர் கமல். மூன்று வருடங்கள் இவர் நடராஜன் என்பவரிடம் நடனம் பயின்றார். மயிலை ரசிக ரஞ்சனி சபையில் அவரின் அரங்கேற்றம் நடந்தது.
 
26. நடிப்பு, திரைக்கதை, பாடல்கள், நடன இயக்குனர், இயக்குனர், மேக்கப்மேன், தயாரிப்பு, பாடகர் என பல தளங்களில் கமல் பங்களிப்பு செலுத்தியிருக்கிறார். இதேபோல் பங்களிப்பு செலுத்திய முன்னணி நடிகர்கள் வேறு யாருமில்லை.
 
27. கோவிந்த் நிஹாலனியின் துரோக்கல் படத்தையே கமல் குருதிப்புனல் என்ற பெயரில் எடுத்தார். படத்தைப் பார்த்த கோவிந்த் நிஹாலனி, கமல் போன்ற ஒரு கலைஞனால்தான் இதனை செய்ய முடியும். என்னுடைய படத்தைவிட இதில் - குருதிப்புனலில் - குடும்பம் சம்பந்தமான காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது என்று பாராட்டினார்.
26. அதிகமுறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களில் கமல் நடித்தப் படங்களே இன்றும் முன்னணியில் உள்ளன.
 
27. எதிர்ப்புகள் கமலுக்கு வழக்கமானவை. இவரின் ஹேராம் படம் வெளிவருவதற்கு முன் காங்கிரஸாரின் எதிர்ப்பை சம்பாதித்தது. அப்போது சில இடங்களில் ஆர்எஸ்எஸ் படத்தை ஆதரித்தது. படம் வெளிவந்த பின் காங்கிரஸ் ஆதரித்தது, ஆஎஸ்எஸ் எதிர்த்தது.
 
28. கமல் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்தது மாஸ்டர் தங்கப்பனிடம். இவர் வேளாங்கண்ணி படத்தை இயக்கிய போது அந்தப் படத்தில் உதவி இயக்குனராக கமல் பணிபுரிந்தார்.
 
29. கமலுக்கு பல பட்டங்கள் இருந்தாலும் கலை ஞானி கொஞ்சம் ஸ்பெஷல். இதனை அளித்தவர் கலைஞர் கருணாநிதி.
 
30. இயக்குநர் பாலுமகேந்திரா பொருளாதார நெருக்கடியில் இருந்த நேரம் கமலிடம் பண உதவி கேட்டார். அதற்கு எந்தப் பதிலும் அளிக்காத கமல் தனது நிறுவனம் சார்பில் ஒரு படத்தை இயக்க அவர் கேட்டதைவிட ஐந்து மடங்கு தொகையை அட்வான்ஸாக தந்தார். அந்தப் படம் சதிலீலாவதி.

31.  உலக அளவில் அவ்ரோ 3டி தொழில்நுட்பத்தில் உருவான இரண்டாவது படம் விஸ்வரூபம். ஆசிய அளவில் முதலாவது.
 
32. நடிகர்கள் அல்லாத நண்பர்களை நடிக்க வைப்பதில் கமலுக்கு தனி ஆர்வம். வாலி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இயக்குனர் கே.விஸ்வநாத், எல்.வி.பிரசாத், கவிஞர் புவியரசு, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், பாடகர் மனோ, பாடகி உஷா உதுப்... சொல்லிக் கொண்டே போகலாம். 
33. பின்னணி இசை போதும். பாடல்களை அவசியம் போட்டுத்தான் ஆக வேண்டும் என்பதில்லை. மேடைப் பேச்சுக்கு இடையே திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுவது போல்தான் படங்களின் நடுவில் வருகிற பாடல்கள் எனக்குப் படுகின்றன. சில படங்களில் வருகிற பாடல் காட்சிகளைக் கண்டு மிக மிக வேதனைப்படுகிறேன். என்னால் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது மிக மிக கஷ்டமாக இருக்கிறது - கமல் இதைச் சொன்னது 1980 ல்.
 
34. ஐ.வி.சசி இயக்கத்தில் கமல் நடித்த குரு படம் 45 நாட்களில் 3885 ஹவுஸ்ஃபுல் காட்சிகளைக் கண்டது. இது அந்தக் காலத்தில் சாதனையாகப் பார்க்கப்பட்டதால் படத்தின் விளம்பரங்களில் இதனை குறிப்பிட்டனர்.
 
35. கமல் முதலில் தயாரித்த படம் ராஜபார்வை. இதனை இயக்க அவர் முதலில் அணுகியது பாலசந்தரை. அவர் பிஸியாக இருந்ததால் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்குனராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனை கமல், தாய்ப்பால் கிடைக்காததால் புட்டிப்பாலை சாப்பிட வேண்டியதாயிற்று என்று குறிப்பிட்டுள்ளார். 
36. இலக்கியவாதிகளை சினிமாவுக்கு கொண்டு வருவதில் கமலுக்கு ஆர்வம் அதிகம். சுஜாதா, பாலகுமாரன், ராகி.ரங்கராஜன், ஞானக்கூத்தன், புவியரசு, இரா.முருகன், மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன் என்று பலருடன் கமல் பணிபுரிந்திருக்கிறார்.
 
37. கமல் அதிகம் மதிக்கும் நடிகர் திலீப் குமார். நான் சேர்ந்து நடிக்க விரும்பிய ஒரே நடிகர் திலீப் குமார்தான் என்று சமீபத்தில்கூட கமல் தெரிவித்திருந்தார்.
 
38. இன்னைக்கும் க்ளோசப் காட்சி வைக்க முடிகிற ஒரே நடிகன் கமல்ஹாசன்தான் - இதைச் சொன்னவர் பாரதிராஜா.
 
39. கமல் (சில நாட்கள்) இயக்கிய முதல் படம் மருதநாயகம் என்றாலும் வெளிவந்தது அவ்வை சண்முகியின் இந்தி ரிமேக்கான சாச்சி 420 படமே.
 
40. நேர்பேச்சிலும் பேட்டியின் போதும் முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் பேச வேண்டும் என்று நினைப்பவர் கமல். அதனை இன்றுவரை பின்பற்றியும் வருகிறார்.
41. கேரளா சென்றால் பழம்பெரும் கலைஞர்கள் எங்கிருக்கிறார்கள் என்று விசாரித்து அவர்களை நேரில் சென்று பார்ப்பது கமலின் வழக்கம்.
 
42. குரு படத்தில் வசனம் எழுதியவர்கள் ஹாஸன் பிரதர்ஸ். ஹாஸன் பிரதர்ஸில் கமல் உள்பட பலரும் உண்டு. இது அப்போது சிறிய சர்ச்சையையும் உருவாக்கியது.
 
43. கமலுக்கு மேக்கப் மீது தணியாத ஆர்வம். இதற்காகவே ஹாலிவுட் சென்று பிரபல மேக்கப்மேன் மைக்கேல் வெஸ்ட்மோரிடம் உதவியாளராக இருந்து மேக்கப் கலையை பயின்றார். அவர் பணியாற்றிய சில்வர்ஸ்டார் ஸ்டாலோனின் படத்தில் கமலும் சில தினங்கள் பணியாற்றியிருக்கிறார்.
 
44. கமல் சார்லி சாப்ளினின் தீவிர ரசிகர். அவரின் பாதிப்புகளை கமல் படத்தில் காணலாம். என்னுடைய அலுவலக அறையில் இருக்கும் ஒரே புகைப்படம் சாப்ளினுடையது என்று பல வருடங்களுக்கு முன்பு கமல் கூறியிருக்கிறார்.
 
45. கமல் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் நடுவில் ஓய்வு எடுப்பது கிடையாது. ஓய்வு எடுக்கிறேன் என்று வெளிநாடு சென்றால் அங்கும் சினிமா குறித்து, தொழில்நுட்பம் குறித்து படித்துக் கொண்டிருப்பார். கமலைப் பொறுத்தவரை ஓய்வு என்பதே சினிமாவைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதுதான். இதனைச் சொன்னவர் கமலின் மூத்த சகோதரர் சந்திரஹாசன்.
 
46. நடிகர் ராஜேஷும் கமலும் நண்பர்கள். ஒருமுறை படம் இயக்கயிருப்பதாக ராஜேஷ் சொல்ல உடனே இருக்கையிலிருந்து எழுந்த கமல் அவரை வரவேற்கும் விதமாக சொன்ன வாசகம் புகழ் பெற்றது. இது கடல், இங்கு எத்தனை திமிங்கலங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.
 
47. தொ.பரமசிவத்தின் நாட்டாற்றியல் ஆய்வுகள், புத்தகங்கள் மீது கமலுக்கு மதிப்பும், ஈடுபாடும் உண்டு. தொ.ப. வின் புத்தகம் ஒன்றிலிருந்து அவர் எடுத்துக் கொண்ட பெயர்தான், விருமாண்டி.
 
48. கமலின் இலக்கிய ஈடுபாடு அனைவரும் அறிந்தது. தனது ரசிகர்மன்ற பத்திரிகையான மய்யத்தை இலக்கிய பத்திரிகைப் போலவே நடித்தினார். இப்போது இது இணையத்திலும் வெளிவர உள்ளது.
 
49. மறுநாள் எடுக்க வேண்டிய காட்சிகள், அதற்குத் தேவையான பொருட்கள், கருவிகள், எப்படி படமாக்கப்பட வேண்டும் என்பதை முதல்நாளே தெளிவாக கூறிவிடுவது கமலின் பழக்கம். அடுத்த நாள் அவர் சொன்னதில் ஏதேனும் தவறு நடந்தால் கடுங்கோபம் வரும்.
 
50. நாகேஷ் கமலுக்குப் பிடித்தமான நடிகர். பாலசந்தர் இயக்கத்தில் நடிக்கையில், நாகேஷ்னா இதை இன்னும் சிறப்பா பண்ணியிருப்பார் என்று பாலசந்தர் அடிக்கடி சொல்வதால் ஏற்பட்ட வியப்பு கடைசிவரை கமலிடம் இருந்தது. நாகேஷை தொடர்ச்சியாக கமல் பயன்படுத்திக் கொண்டதும் இதனால்தான்.
51. இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர் அறிமுகமானது கமல் படத்தில் என்பது பலருக்கு தெரியாது. மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் படத்தில் ஊர்மிளா அறிமுகமானார்.
 
52. ஆளவந்தான் படத்தில் வன்முறை காட்சிகளை அனிமேஷனில் காட்டியிருப்பார் கமல்ஹாசன். இந்தப் படம்தான் ஹாலிவுட் இயக்குனர் குவெண்டின் டொரண்டினோ தனது கில் பில் படத்தில் வன்முறை காட்சிகளை அனிமேஷனில் வைக்க காரணம். இதனை அவரே தெரிவித்திருக்கிறார்.
 
53. கமலுக்குப் பிடித்த எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஜெயகாந்தன். தனது முக்கியமான படங்களை திரைக்கு வருவதற்கு முன்பு ஜெயகாந்தனுக்கு திரையிட்டு காண்பிப்பது கமலின் வழக்கம்.
 
54. மலையாள இயக்குனர்கள் சிபி மலையில், பரதன் போன்றோரை தமிழுக்கு அழைத்துவர வேண்டும் என்ற ஆசை கமலுக்கு இருந்தது. அதன் வெளிப்பாடுதான் தேவர் மகனை பரதன் இயக்கியது. சிபி மலையில் இயக்கத்தில் தமிழ்ப் படம் நடிக்க வேண்டும் என்ற கமலின் ஆசை இதுவரை கைகூடவில்லை.
 
55. பாடல்கள் இல்லாத கமல் படங்கள் இரண்டு. பேசும் படம், குருதிப்புனல். கமல் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்திலும் பாடல்கள் கிடையாது.
 
56. பாலசந்தர் கமலைப் பாராட்டி, மை டியர் ராஸ்கல் என்று தொடங்கி எழுதிய நீண்ட கடிதத்தை பெரிய பாராட்டாக இன்றும் கமல் கருதுகிறார். பிரேமிடப்பட்ட அந்தக் கடிதத்தை இப்போதும் அவரது வீட்டில் காணலாம்.
 
57. கமல் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, வங்காளம் என்று ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். விரைவில் ஆங்கிலமும் இதில் சேர இருக்கிறது.
 
58. நான் சிறுவனாக அறிமுகமானேன். வில்லன் வேஷத்தில் பிரபலமானேன். நல்ல ஹீரோ என்று பெயர் எடுக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கு காலமும் கலையுலகமும் கை கொடுக்க வேண்டும். - 1974 ல் கன்னியாகுமரி படத்தில் ஹீரோவாக அறிமுகமான போது கமல் சொன்னது.
 
59. கமல் ஒரு சாதனையாளர். இளம் வயதில் இந்திப்பட உலகில் நுழைந்து புகழ் பெற்றது முதல் சாதனை என்றால் அகில இந்திய சிறந்த நடிகராக தேர்வு பெற்றது இரண்டாவது சாதனை. மேலும் பல சாதனைகளை கமல் நிகழ்த்த வேண்டும் என்பதே என் விருப்பம் - கமலுக்கு முதல் தேசிய விருது கிடைத்த போது ரஜினி சொன்னது.
 
60. கமல் அறிமுகமானது தமிழ் என்றாலும் அவர் கதாநாயகன் அந்தஸ்தை பெற்றது மலையாளப் படத்தில். படம் கன்னியாகுமரி. வருடம் 1974.

வெப்துனியா சார்பாக கமல் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......