வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிதம்பரம் நடராஜர் கோவிலின் ரகசியம் என்ன தெரியுமா....?

சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடமானது, பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகிறது. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலின் 9 நுழைவு வாசல்களும், மனித உடலில் இருக்கும் நவ துவாரங்களை குறிக்கின்றது.

கோவில் விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டு உள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 முறை  சுவாசிக்கிறான் என்பதை குறிக்கிறது.
 
21,600 தகடுகளை வேய, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 72 ஆயிரம் என்ற எண்ணிக்கை, மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த  நாடிகளை குறிக்கிறது. இதில் கண்ணுக்கு தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
 
பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டு உள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். அந்த இடத்தை அடைய 5 படிகள் ஏற வேண்டும். இந்த படிகளை பஞ்சாட்சரப்படி என்று அழைக்கப்படுகிறது.
 
கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. அது 4  வேதங்களை குறிக்கின்றது.
 
பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளை கொண்டு உள்ளது. இது 64 கலைகளை குறிப்பதாக சொல்கிறார்கள்.
 
பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும், அர்த்த  மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கிறது.
 
எளிதில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், `சிதம்பர ரகசியம் என்பது, எல்லாம் மனக் கண்ணால் பார்க்க வேண்டியதாகும். அதாவது, திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் ஞானம் பிறக்கும்' என்று விளக்கம் தருகிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.