வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By
Last Modified: திங்கள், 11 டிசம்பர் 2017 (17:46 IST)

சனி பெயர்ச்சி பலன்கள் தனுசு - (2017 - 2020)

எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள தனுசு இராசி அன்பர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர். உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடைய விரும்புபவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள்.
கிரகநிலை: இதுவரை உங்களது அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் விலகி ராசிக்கு வருகிறார். மூன்றாம் பார்வையால் தைரிய வீரிய ஸ்தானத்தையும், எழாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையால்  தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
உடல் சோர்வு அதிகரிக்கலாம். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும்.  நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில்  ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து  போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம  காரியங்களைச் செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும்  உங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும். 
 
உங்களின் தனித் தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்து கொள்ளமாட்டீர்கள்.  அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். கடுமையாக  உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றிவாகை நிச்சயம். தார்மீகச் சிந்தனைகளை மேலோங்கச் செய்வார். ஆன்மீகத்தில்  நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. இது  நாள் வரை உடலில் இருந்த சோர்வும் அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராக மாறும். குடும்பத்தில்  மருத்துவச்செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும்.  குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து  முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். புதிய  தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும். 
 
 
உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள். ஆனால் சக  ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். 
 
 
வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும்  அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில்  உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும்  என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். 
 
அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய  பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத்  தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள். 
 
கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோட ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம்  செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
 
பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே  இருக்கவும். 
 
மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால்  மேலும் உடல் வலிமை பெறலாம்.
 
பரிகாரம்: ராகுகேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும்  சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை  போக்கி மனதில் நிம்மதியை தரும்.
 
சிறப்பு பரிகாரம்: வியாழக்கிழமை தோறூம் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.
 
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.
 
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.
அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:  ஞாயிறு, செவ்வாய், வியாழன்.