வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2016 (16:58 IST)

ரிஷபம் - துர்முகி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2016

கடின உழைப்பாளிகளே! உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் இந்த துர்முகி ஆண்டு பிறப்பதால் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும். சோர்ந்து முடங்கி போயிருந்த உங்கள் உள்மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஒத்து வராத, உதவாத, உண்மையில்லாத உறவுகளை ஒதுக்கித் தள்ளுவீர்கள். மற்றவர்களை நம்பி ஏமாந்ததெல்லாம் போதும், இனி களத்தில் நேரடியாக குதிப்பீர்கள். கற்பனையில் மூழ்காமல் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். ஆடி, ஆவணி மாதத்தில் இழுபறியாக இருந்த அரசு காரியம் முடியும். வெளிநாடு, வெளி மாநிலங்கள் சென்று வருவீர்கள்.
 
09.09.2016 முதல் 25.10.2016 வரை உங்களின் விரைய-சப்தமாதிபதியான செவ்வாய் 8-ல் மறைவதாலும், 19.09.2016 முதல் 13.10.2016 வரை உங்களின் ராசிநாதனான சுக்ரன் 6-ல் மறைவதாலும் முன்கோபம், வீண் அலைச்சல், தொண்டை வலி, சிறுசிறு நெருப்புக் காயங்கள், சகோதர வகையில் சச்சரவுகள், வழக்கால் நிம்மதியின்மை, கணவன்-மனைவிக்குள் விவாதங்கள், மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்துப் போகும்.
 
இந்தாண்டு முழுக்க ராகு 4-ம் இடத்திலும், கேது 10-லும் தொடர்வதால் சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வருமான வரி, விற்பனை வரிகளையெல்லாம் அரசாங்கத்திற்கு கால தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொத்தை விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணம் வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்களைப் பெற்றுக் கொள்வது நல்லது.
 
தாயாருக்கு அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டில் வலி, கழுத்து எலும்புத் தோய்மானம் வந்துச் செல்லும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகளும் வரக்கூடும். அவர் உங்களை கோபத்தில் ஏதேனும் பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம். நேரம் தவறி சாப்பிட வேண்டியிருக்கும். அலைச்சலும் இருக்கும். அசிடிட்டி தொந்தரவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். உணவில் பழங்கள், காய்களை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். இடப்பெயர்ச்சி உண்டு.
 
வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்களால் தொந்தரவுகள் ஏற்படும். சாலை விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சிறுசிறு அபராதத் தொகை கட்ட வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும். சின்ன சின்ன அவமானங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் கழிவு நீர் மற்றும் குடி நீர் குழாய் பிரச்சனை வந்துப் போகும். உங்களைப் பற்றிய விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள் வரும்.
 
01.08.2016 வரை உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் 4-ல் அமர்வதால் உங்களின் அடிப்படை நற்குணங்களும், நடத்தை கோலங்களும் மாறாமல் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி சற்று தாமதமாக கிடைக்கும்.
 
எந்த ஒரு விஷயத்தையும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக அனுகுவது நல்லது. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகன விபத்துகள் வந்து நீங்கும். சிலர் சொந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற வேண்டியது வரும். 02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ல் நுழைவதால் ஒரளவு வசதி, வாய்ப்புகள் பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடியாக சில திட்டங்கள் தீட்டுவீர்கள். வீட்டில் சந்தோஷம் பெருகும். கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசம் என வீடு களைக்கட்டும்.
 
எத்தனையோ கோவில் குளம் ஏறி இறங்கியும் வீட்டில் ஒரு மழலைச் சத்தம் கேட்கவில்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தாயாருக்கு இருந்து வந்த நோய் குணமடையும். மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த நண்பர்கள், உறவினர்கள் இனி விரும்பி வந்து பேசத் தொடங்குவார்கள். குலதெய்வ கோவிலில் நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். உங்கள் மகளுக்கு வரன் தேடி அலைந்து அலுத்துப் போனீர்களே! நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும்.
 
திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகளும் சாதகமாக முடிவடையும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள்.
 
எங்கேயோ காட்ட வேண்டிய கோபத்தை அடக்கி வைத்திருந்ததை குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வீசி வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. சிலர் உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்பிருக்கிறது. மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். மற்றவர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர் இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள்.
 
இந்த வருடம் முழுக்க சனி உங்கள் ராசிக்கு 7-ல் அமர்ந்து கண்டகச் சனியாக தொடர்வதால் முன்கோபம் அதிகமாகும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை அப்படியே மறந்து விடுவது நல்லது. நீ இப்படி பேசுவதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லையே. உன்னை யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றெல்லாம் மனைவியுடன் எதிர்வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.
 
வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். திருமண முயற்சிகள் தாமதமாக முடியும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு கவனமாக படித்துப் பார்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்ல வேண்டாம். முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்யோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவால் ஆரோக்யம் பாதிக்கும். பாஸ்போட், வாகனத்திற்கான லைசன்ஸ், ஆர்.சி புத்தகங்களையெல்லாம் புதுப்பிக்கத் தவறாதீர்கள்.
 
வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலைவிட வேண்டாம். லாபம் மந்தமாக இருக்கும். மாறி வரும் சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாக கவனித்து செயல்படப்பாருங்கள். விளம்பர யுக்திகளாலும், தள்ளுபடி அறிவிப்பாலும் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். மற்றவர்களை நம்பி அனுபமில்லாத தொழிலில் இறங்க வேண்டாம். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக மற்றும் கூட்டுத் தொழில் தொடங்குவதற்கு முன்பாக வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. முடிந்த வரை கூட்டுத்தொழிலை தவிர்ப்பது நல்லது. ஆவணி, ஐப்பசி, மாசி மாதங்களில் பற்று வரவு உயரும். ஹோட்டல், கெமிக்கல், எண்ணெய், மூலிகை, கமிஷன் வகைகளால் ஆதாயமுண்டு.
 
இந்தாண்டு முழுக்க கேது 10-ல் தொடர்வதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார். உங்கள் உழைப்பிற்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். சக ஊழியர்களில் ஒருசாரர் உங்களுக்கு ஆதரவாகவும், ஒருசாரர் எதிராகவும் செயல்படுவார்கள். சிலருக்கு அயல்நாட்டில் அல்லது வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆடி, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும்.                      
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வருடத்தின் இறுதியில் கல்யாணம் முடியும். ஃபேஸ் புக், டிவிட்டரை எல்லாம் கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சி செய்வார்கள். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம். அல்சர், யூரினரி இன்பெக்ஷன், முகப்பரு வந்துச் செல்லும்.
 
மாணவ-மாணவியர்களே! விளையாட்டைக் குறையுங்கள். தொடக்கத்திலிருந்தே படிப்பில் தீவிரம் காட்டுங்கள். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில் சிலரின் சிபாரிசு அல்லது அதிக பணம் கொடுத்து சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணிக்க வேண்டாம். அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசலில் இறங்காதீர்கள். எதிர்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். தலைமையின் கோபம் குறையும்.
 
கலைத்துறையினரே! வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனந்தளராமல் இருங்கள். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும்.
 
இந்தப் புத்தாண்டு தொடக்கத்தில் உங்களை துவள வைத்தாலும், இறுதியில் வெற்றியை தரும்.
 
பரிகாரம்:
 
ஸ்ரீவிநாயகப் பெருமானை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் அருகம்பில் மாலை அணிவித்து வணங்குங்கள்.