1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2016 (16:46 IST)

மேஷம் - துர்முகி தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2016

தைரியசாலிகளே! இந்த துர்முகி ஆண்டு பிறக்கும் நேரத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 8-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பெரிய திட்டங்களெல்லாம் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

உடன்பிறந்தவர்களின் ஒற்றுமை பலப்படும். பாதித் தொகை தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப்பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். பூர்வ புண்யாதிபதி சூரியன் உங்கள் ராசியிலேயே உச்சமடைந்திருப்பதுடன், புதனும் உங்கள் ராசியில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் தடைப்பட்டு வந்த அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும்.
 
புது வாய்ப்புகள் தேடி வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். உங்களுடைய ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். மாதக் கணக்கில், வாரக் கணக்கில் தள்ளிப் போன காரியங்களெல்லாம் விரைந்து முடியும். மனோ பலம் அதிகரிக்கும். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
 
வருடப் பிறப்பு முதல் ஆவணி மாதம் பிற்பகுதி வரை ராசிநாதன் செவ்வாய் சனியுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் சிறுசிறு விபத்துகள், இரத்த சோகை, முன்கோபம், வீண் பகை, சகோதர வகையில் செலவுகள் வந்துச் செல்லும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் அலட்சியம் வேண்டாம்.
 
வருடப் பிறப்பு முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில் நிற்பதால் மனதிலே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் செய்து வைப்பீர்கள். மகனுக்கு எதிர்பார்த்தபடி அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புது வேலை அமையும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
 
02.08.2016 முதல் 16.01.2017 வரை மற்றும் 10.03.2017 முதல் 13.04.2017 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். சில நேரங்களில் வாழ்க்கை மீது ஒருவித வெறுப்புணர்வு ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும்.
 
இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். திடீர் பயணங்கள் அதிகமாகும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் வரக்கூடும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும். உங்களை விட தகுதியில் குறைந்தவர்கள், வயதில் சிறியவர்கள் அல்லது ஒரு காலத்தில் உங்கள் உதவியால் முன்னேறியவர்களில் சிலர் உங்களை மதிக்காமல் போவார்கள்.
 
ஆனால் 17.01.2017 முதல் 09.03.2017 வரை குருபகவான் அதிசாரத்திலும், வக்ரகதியிலும் ராசிக்கு 7-ல் அமர்ந்து உங்களது ராசியைப் பார்க்க இருப்பதால் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். மனைவிக்கு இருந்து வந்த நோய் குணமாகும். மனைவிவழி உறவினர்களுக்கும் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.
 
இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாக தொடர்வதால் சில நேரங்களில் எங்கே நிம்மதி என்று தேட வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளப்பாருங்கள். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவிப்பீர்கள். மற்றவர்கள் ஏதேனும் ஆலோசனைக் கூறினாலோ அல்லது உங்களது தவறுகளை சுட்டிக் காட்டினாலோ அதை பொறுமையாக ஏற்றுக் கொள்வது நல்லது. இரவு நேரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம்.
 
குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையை சுமூகமாக தீர்க்கப்பாருங்கள். வழக்கு வியாஜ்யம் என்றெல்லாம் வீண் செலவுகள் செய்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாறாதீர்கள். பணம், திருமண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். 26.08.2016 முதல் 18.09.2016 வரை உங்களின் தன-சப்தமாதிபதியான சுக்ரன் 6-ல் சென்று மறைவதால் வாகன விபத்து, வழக்கால் நெருக்கடிகள், மனைவிக்கு கர்பப்பை வலி வந்து நீங்கும்.
                
இந்தாண்டு முழுக்க ராகு ராசிக்கு 5-ம் வீட்டிலேயே அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போவது நல்லது. சில சமயங்களில் உங்களை எதிர்த்து வாதாடுவார்கள். கோபப்படாதீர்கள். அவர்களின் திருமணம், உயர்கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 
பூர்வீக சொத்தை சரியாக பராமரிக்க முடியாமல் போகும். கூடாப்பழக்கமுள்ளவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. ஆனால் கேது இந்தாண்டு முழுக்க லாப ஸ்தானத்திலேயே நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
 
கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்தையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வேற்றுமாநிலத்தவர்கள், மாற்று மதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.
 
வியாபாரத்தில் கடினமாக உழைத்து ஒரளவு லாபம் பெறுவீர்கள். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். வெளிமாநிலத்தை சார்ந்தவர்களை வேலைக்கு வைக்கும் போது கவனமாக இருங்கள். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இருப்பதை வைத்து சம்பாதிக்கப் பாருங்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். பங்குதாரர்கள் உங்களது கருத்துக்களை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக் கொள்வார்கள். கமிஷன், கட்டிட உதிரி பாகங்கள், கடல் வாழ் உயிரினம், பெட்ரோ-கெமிக்கல் வகைகளால் ஆதாயமடைவீர்கள். ஆனி, புரட்டாசி, தை, மாசி மாதங்களில் பிரபலங்கள், நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
 
உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சலுகைகள், உரிமைகளைக் கூட போராடி பெற வேண்டி வரும். சக ஊழியர்கள் கூட சில நேரங்களில் சாதகமாகவும், பல நேரங்களில் மரியாதைக் குறைவாகவும் நடந்துக் கொள்வார்கள். புரட்டாசி, தை, பங்குனி மாதங்களில் சம்பள உயர்வு உண்டு. அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகளும் தேடி வரும். சிலர் உத்யோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
 
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். புதிதாக அறிமுகமாகுபவர்களை நம்ப வேண்டாம். இரவில் அதிக நேரம் கண் விழித்திருக்க வேண்டாம். கண்ணிற்கு கீழ் கரு வளையம், மாதவிடாய்க் கோளாறு, அடி வயிற்றில் வலி வந்துப் போகும். திருமணம் நிச்சயமாகும்.
 
மாணவ-மாணவிகளே! மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்களால் முன்னேற்றம் உண்டாகும். கலை, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெறுவீர்கள்.
 
கலைத்துறையினரே! போட்டிகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். திரையிடப்படாமல் முடங்கிக் கிடந்த உங்களுடைய படைப்புகள் வெளியாகும்.
 
இந்த துர்முகி வருடம் தன் பலம் பலவீனத்தை உணர வைப்பதுடன் ஓரளவு நன்மையையும் தரும். 
 
பரிகாரம்:
 
வில்வதளத்துடன் பிரதோஷ பூஜையில் கலந்துக் கொள்ளுங்கள்.