1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:36 IST)

2014 குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்!

ஆழமாக யோசிக்கும் நீங்கள், அநாவசியமாக அடுத்தவர்கள் மீது பழி சுமத்த மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்தாரே! எந்த ஒரு வேலைகளையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்தாரே! எதை செய்தாலும் அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்தினாரே! தந்தையாருக்கு மருத்துவச் செலவுகளையும், அவருடன் கருத்து மோதல்களையும் ஏற்படுத்திய குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்வீர்கள். 
 
உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது. கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். உன் சொந்தம், என் சொந்தம் என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். 
 
வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். தாயாருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சை, மூட்டு வலி, முதுகு தண்டில் வலி வந்துப் போகும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குவது நல்லது. சொத்து விற்பதாக இருந்தால் ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். 
 
தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகமாகும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உறவினர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். கூடாப்பழக்க வழக்கங்கள் இலவசமாக தொற்ற வாய்ப்பிருக்கிறது. நல்லவர்களின் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். சின்ன சின்ன அபராதம் செலுத்த வேண்டி வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.  

குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோகஸ்தானத்தை பார்ப்பதால் சிலருக்கு புது வேலைக் கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வீட்டில் கூடுதல் அறைக்கட்டுவீர்கள்.   
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் பாக்ய-விரையாதிபதியான குருபகவான் தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். தந்தையார் ஆதரவாக இருப்பார். அவர்வழி உறவினர்களும் உதவிகரமாக இருப்பார்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும். புது வேலைக் கிடைக்கும்.
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் ஜீவனாதிபதியும்-லாபாதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, இனந்தெரியாத கவலைகள், குடும்பத்தில் சலசலப்பு, உத்தியோகத்தில் எதிர்ப்புகள் வந்துச் செல்லும். வேற்றுமதத்தை சேர்ந்த நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரங்கள் உதவுவார்கள். 
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை சேவகாதிபதியும்-சஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் செலவுகள், சிறுசிறு விபத்துகள், உங்களைப் பற்றிய வதந்திகள், பழைய கடனை நினைத்த அச்சம், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்துச் செல்லும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். 
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும்.   

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் அரைக்குறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. மனைவிவழியில் இருந்த மோதல்கள் விலகும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். 
 
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப்பாருங்கள். தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பர யுக்திகளை கையாளுங்கள். வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள். கடையை வேறிடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். 
 
ரியல் எஸ்டேட், புரோக்கரேஜ், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். சிலர் நம்பிக்கையான பங்குதாரரை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.    
    
உத்தியோகத்தில் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை இருக்கும். உயரதிகாரிகள் பாரபட்சமாக நடந்துக் கொள்வார்கள். கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைத்தப் போதும் அதற்கு எவ்வித பாராட்டும் இல்லாமல் போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி இடமாற்றம் வரும். சில நேரங்களில் உங்களின் அடிப்படை உரிமைக்காகக்கூட போராட வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.      
 
கன்னிப் பெண்களே! கல்யாணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு. தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக பழகுங்கள்.  
 
மாணவ-மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த கல்விப் பிரிவில், கல்வி நிறுவனத்தில் சேர அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். 
 
கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத்திறன் வளரும். உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள்.
 
இந்த குரு மாற்றம் அவ்வப்போது ஏமாற்றங்களையும், இடமாற்றங்களையும் தந்தாலும் கடின உழைப்பால் முன்னேற வைக்கும்.  
 
பரிகாரம்: 
 
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஆலங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் ஏதேனும் ஒரு வியாழக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். ஆதவரற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள்.