1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 13 ஜூன் 2014 (18:38 IST)

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்!

உண்மையை விரும்பும் நீங்கள், மறைத்துப் பேசுபவர்களை கண்டால் கோபப்படுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். 
 
எந்த ஒரு வேலைகளையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வாயுக் கோளாறால் நெஞ்சு வலிக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீண் வறட்டு கௌரவத்திற்காக சேமிப்பை கரைத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். வாகனத்தில் செல்லும் தவறாமல் தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். 
 
மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அன்யோன்யமும் குறையாது. மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். சிலர் உங்களை நேரில் பார்க்கும் போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி தவறாகவும் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

 உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வீடு கட்டுவது, வாங்குவது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். 
 
குரு உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. கூடாப்பழக்கம் விலகும். கனவுத் தொல்லை குறையும். குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் பணவரவு உண்டு. தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வேலைக் கிடைக்கும். குரு லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.    
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் அஷ்டம-லாபாதிபதியான குருபகவான் புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். மூத்த சகோதர வகையில் சச்சரவு வரும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். புது பதவிகள், பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.  
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் பாக்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்யம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்கு சாதகமான தீர்ப்பு வரும். ஷேர் மூலம் பணம் வரும். கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
 
  28.8.2014 முதல் 02.12.2014 வரை மற்றும் 22.12.2014 முதல் 04.07.2015 வரை உங்களின் தன-பூர்வபுண்ணியாதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்-. குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்து கைக்கு வரும். 
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் அவ்வப்போது ஒரு வெறுமையை உணருவீர்கள். ஒருவித படபடப்பு, ஹார்மோன் பிரச்னை, ஈகோவால் கணவன்-மனைவிக்குள் சச்சரவு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை ஏற்படும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள்.  
 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் மனக்குழப்பம், பூர்வீக சொத்துப் பிரச்னை, வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். உங்களுடைய கனவுகளை அவர்கள் மீது திணிக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கல்யாண விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். மனைவி உங்களைப் புரிந்துக் கொள்வார். புது வாகனம் வாங்குவீர்கள். 
 
வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வேலையாட்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டிட உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோ-கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். பங்குதாரர்ளில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும் மற்றொருவர் மூலமாக குடைச்சல்கள் இருக்கும்.  
   
உத்தியோகத்தில் சின்ன சின்ன அலைகழிப்புகள் இருக்கும். மேலதிகாரியின் குறை, நிறைகளையெல்லாம் சுட்டிக் காட்ட வேண்டாம். பணிகளை கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். தேர்வில் வெற்றி பெற்று உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். என்றாலும் தன்நிலையை தக்க வைத்துக் கொள்ள கொஞ்சம் போராட வேண்டி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். இடமாற்றம் சாதகமாகும்.  
  
கன்னிப்பெண்களே! சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு கிட்டும். காதல் கசக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலையில் அமருவீர்கள். 
 
மாணவ-மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில் எதிர்பார்த்த நிறுவனத்தில் சேருவீர்கள். அறிவாற்றல் கூடும். சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள்.
 
கலைத்துறையினரே! பெரிய வாய்ப்புகள் வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். 
 
இந்த குரு மாற்றம் சிறுசிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும். 
 
பரிகாரம்: 
 
தஞ்சாவூர் அருகிருலுள்ள தென்குடித் திட்டை எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவசிஷ்டேஷ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரதோஷ நாளில் கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.