வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

வரலட்சுமி விரதம் தோன்றிய புராணக்கதை பற்றி தெரியுமா...?

சகல வளங்களையும் தரும் வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அன்று பெண்கள், குறிப்பாக சுமங்கலிப் பெண்கள் தங்களின் தாலி பாக்கியத்துக்காகவும், குடும்ப சுபிட்சம், மற்றும் சௌபாக்கியம் நிலைக்கவும், இந்த விரதத்தை பக்தியுடன்  மேற்கொள்ள வேண்டும்.

கேட்கும் வரங்களை அள்ளித் தரும் லட்சுமி தேவியை பூஜிப்பதால், வாழ்க்கையில் நிலையான செல்வமும், நீடித்த புகழும் கிடைக்கும். திருமணமான பெண்கள்,  ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 
 
வரலட்சுமி விரதம் தோன்றிய வரலாறாக பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அவற்றுள் முக்கியமானது இது தான். சிவபெருமானின் உபதேசப்படி, மகாலட்சுமியை வழிபட்டு விரதம் பூண்டாள் உமாதேவி. இதனாலேயே முருகன் அவதாரம் நிகழ்ந்தது என புராணங்கள் கூறுகின்றன. மலைமகளாம் பார்வதி தேவி,  அலைமகளாம் திருமகளைப் போற்றி, விரதம் பூண்ட நன்னாளே வரலட்சுமி விரத நன்னாள் ஆகும்.
 
வரலட்சுமி விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கீழ்கண்ட கதை தெரிவிக்கிறது. மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் நகரில் பிறந்து வாழ்ந்து  வந்தாள் சாருமதி. கற்பில் சிறந்தவள். தன் கணவன், மாமனார், மாமியாருக்கு வேண்டிய நற்பணிகளைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள். வறுமையிலும் பெருமையான வாழ்க்கையை நடத்தி வந்தாள்.
 
எத்தகைய வறுமையிலும் இறைவனை வணங்கிடத் தவறியதில்லை. அவளுக்கு அருள்புரிய நினைத்த மகாலட்சுமி, சாருமதியின் கனவில் தோன்றினாள். “உனது  சிறப்பான பக்தி எனது நெஞ்சை நெகிழ வைத்தது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய்வாய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்” என்றாள். அதன்படி சாருமதி மேற்கொண்ட விரதமே வரலட்சுமி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி.