1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2016 (01:31 IST)

மேஷம் - 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

நேர்மையாளர்களே! உங்களின் ராசிநாதனாகிய செவ்வாய் பகவான் லாப வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்களின் நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.


 

எதிர்பாராத பணவரவு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற்று புது வேலையில் சேர்வீர்கள். வழக்கால் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விசா இந்தாண்டு வந்து சேரும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பேசாமல் இருந்த நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள்.

ஆனால் 16.01.2017 வரை ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து நிற்பதாலும், 17.1.2017 முதல் 26.2.2017 வரை ராசிக்கு பன்னிரெண்டில் மறைவதாலும் முன்கோபம், இரத்த சோகை, சகோதரங்களுடன் மனக்கசப்புகள், சிறுசிறு நெருப்புக் காயங்களெல்லாம் வந்துப் போகும்.11.4.2017 முதல் 26.5.2017வரை உள்ள காலக்கட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாயை சனி பார்ப்பதால் சிறுசிறு விபத்துகள், பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் ஏமாற்றங்கள் வந்து போகும். வீடு, மனை வாங்கும்போது தாய்ப்பத்திரத்தை சரி பார்க்கத் தவறாதீர்கள்.

உங்களின் சுகாதிபதி சந்திரன் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்கும் போது இந்த 2017ம் ஆண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களிலிருந்து விடுபடுவீர்கள். சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வீடு, வாகனம் உங்கள் ரசனைக் கேற்ப அமையும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும்.

26.7.2017 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் கேது இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நின்று போராடி சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ராகு 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னையில் இப்போது தலையிட வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள்.

ஆனால் 27.7.2017 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு ராகு 4-ம் வீட்டிலும், கேது 10-லும் அமர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி அடுத்தடுத்த வேலைபளு இருந்துக் கொண்டேயிருக்கும். வீண் பழிகளும் வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி, இரத்த அழுத்தம் வந்துப் போகும். கடன் பிரச்னையால் சேர்த்து வைத்த கௌரவத்திற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சமும் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்துச் செல்லும்.

வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு உரிமையாளர்களால் தொந்தரவுகள் வந்துப் போகும். சிலர் இருக்கும் இடத்தை விட்டு வேறு வீடு, வேறு ஊர் அல்லது அண்டை மாநிலம் மாற வேண்டிய சூழ்நிலை உருவாகும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகள், லாகிரி வஸ்துகளை தவிர்ப்பது நல்லது. சின்ன சின்ன உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 01.09.2017 வரை உங்களின் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்து சகட குருவாக அமர்ந்திருப்பதால் பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். குடும்பத்தில் வீண் சச்சரவுகள் வரக்கூடும். சந்தேகத்தால் கணவன்-மனைவிக்குள் பிரிவு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். தங்க ஆபரணங்களை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பிள்ளைகளாலும் அலைச்சலும், செலவுகளும் வந்து நீங்கும்.

ஆனால் 02.9.2017 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்கயிருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குடும்பத்தில், பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். ஆரோக்யம் சீராகும். அடகிலிருந்த நகை, சொத்தையெல்லாம் மீட்க வழி, வகை பிறக்கும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். வீடு கட்டும் வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படத் தொடங்குவீர்கள்.

14.12.2017 வரை சனி 8-ல் நின்று அஷ்டமத்துச் சனியாக வருவதால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். ஏமாந்து போன தொகையை நினைத்து வருத்தப்படுவீர்கள். ஏமாற்றிய நபர்களை நினைத்தும் ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்துடன் வெளி ஊருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து செல்லுங்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது.

திடீரென்று அறிமுகமாகுபவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை சொல்ல வேண்டாம். தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். பெரிய நோய்க்கான அறிகுறிகளெல்லாம் இருப்பதைப் போல் தோன்றும். ஆனால் மருத்துவப் பரிசோதனை செய்யும் போது பெரிய பாதிப்புகள் இருக்காது என்றாலும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. வருடத்தின் இறுதியில் 15.12.2017 முதல் சனி 9-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் ஒரு தெளிவுப் பிறக்கும். மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துப் பேசும் பக்குவம் உண்டாகும். நெருடலான, தர்ம சங்கடமான சூழ்நிலைகளெல்லாம் நீங்கும்.

வியாபாரத்தில் இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். என்றாலும் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் வேலையாட்கள் அடிக்கடி விடுப்பில் செல்வார்கள் எனவே பல நாட்கள் நீங்களே தொழிலாளியாகவும், முதலாளியாகவும் இறங்கி வேலைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். புதிய வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது விசாரித்து சேர்ப்பது நல்லது.

அவர்களுக்கு அதிகத் தொகை முன்பணமாக தர வேண்டாம். வாடிக்கையாளர்களுடன் போராட வேண்டி வரும். பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மற்றும் ஜீலை மாதங்களில் கடையை மாற்றுவது, விரிவுப்படுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி பிளாஸ்டிக், புரோக்கரேஜ், மின்சார சாதன வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் உங்களின் உத்யோகஸ்தானாதிபதி சனி 8-ல் நீடிப்பதுடன், ஜீலை 27ஆம் தேதி முதல் கேது உத்யோகஸ்தானத்தில் அமர்வதாலும் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அலுவலகத்தில் சின்ன சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்களும் நிகழக்கூடும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளையும் போராடி பெற வேண்டி வரும். அதிகாரிகளால் மதிக்கப்பட்டாலும் சக ஊழியர்களால் இடையூறுகளை சமாளிக்க வேண்டி வரும். ஆனாலும் செப்டம்பர் மாதம் முதல் வேலைச்சுமை குறையும். மறுக்கப்பட்ட உரிமைகளும் கிடைக்கும். இடமாற்றமும் கிட்டும்.

கன்னிப் பெண்களே! செப்டம்பர் மாதம் முதல் திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும். என்றாலும் தோலில் தடிப்பு, தேமல், தூக்கமின்மை வந்துச் செல்லும். பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

மாணவ-மாணவிகளே! சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வேகம் இருந்தால் மட்டும் போதாது அதற்கான உழைப்பு வேண்டும். சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்த்து நினைவில் நிறுத்துவது நல்லது. விளையாட்டுப் போட்டிகள், பொது அறிவு போட்டிகளில் பரிசு, பாராட்டுக் கிடைக்கும்.

கலைத்துறையினரே! விமர்சனங்களும், கிசுகிசுத் தொந்தரவுகளும் வந்தாலும் அஞ்ச வேண்டாம். உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள்.

இந்த 2017-ம் ஆண்டு முட்கள் நிறைந்த பாதைகளில் உங்களை பயணிக்க வைத்தாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் ஒரளவு முன்னேற்றுவதாக அமையும்.