1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (14:58 IST)

ஜய வருட ராசி பலன்கள் - மீனம்

யார் மனதும் புண்படாதபடி பேசும் நீங்கள், ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த ஜய வருடம் பிறப்பதால் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அழகும் இளமையும் கூடும். உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். வாட்டி வதைத்துக் கொண்டிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் இனி தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம் உடனே முடியும். உங்கள் பலவீனங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள்.  
 
சுக்கிரனும், புதனும் சாதகமான நட்சத்திரத்தில் செல்லும்போதும் இந்த வருடம் பிறப்பதால் வீராவேசமாகப் பேசுவதைவிட, கனிவாகப் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பது தான் நல்லது. பணப்பற்றாக்குறையைப் போக்க கூடுதலாக உழைப்பீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும். உங்களைப்பற்றிய நல்ல அபிப்ராயம் மனைவிவழி உறவினர்கள் மத்தியில் அதிகரிக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். 
 
ஜூன் 12 வரை உங்கள் ராசிநாதனான குருபகவான் 4ம் வீட்டில் நிற்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். அவருடன் வீண் பிரச்னைகள் வந்துபோகும். உங்களைப்பற்றிய விமர்சனங்களும் அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களும் ஏற்படும். ஜூன் 13ந் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் நுழைவதால் வசதி, வாய்ப்புகள் ஓரளவு பெருகும். வருமானத்தை உயர்த்த அதிரடி திட்டங்கள் தீட்டி உழைப்பீர்கள். பிரபலங்கள், தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். கல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். மனை வாங்கிப் போட்டு வெகுநாட்களாகிவிட்டதே! அதில் இப்போது வீடு கட்டி முடிப்பீர்கள். 
 
எவ்வளவோ சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டும் குழந்தை பாக்யம் தள்ளிப் போனவர்களுக்கு அழகான வாரிசு உருவாகும். பிள்ளைகளிடம் இருந்த பிடிவாத குணம் மாறும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனின் கூடாநட்பு விலகும். பொறுப்பாக நடந்து கொள்வார். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். கண்டும், காணாமல் சென்று கொண்டிருந்த சொந்த-பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். அரசாங்க விஷயங்களில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.  
 

ஜூன் 20ந் தேதி வரை ராகு 8ம் வீட்டிலும், கேது 2ம் வீட்டிலும் நிற்பதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். ஈகோ பிரச்னையால் பிரிவுகள் ஏற்படக்கூடும். பேச்சில் காரம் வேண்டாம். எனவே இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படப் பாருங்கள். பல், காது மற்றும் தொண்டை வலி வரக்கூடும். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். ஜூன் 21ந் தேதி முதல் கேது உங்கள் ராசிக்குள் நுழைவதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எண்ணெயில் பொரித்த, வறுத்த மற்றும் வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவ்வப்போது முன்கோபம் வரக்கூடும். ராகுவும் 7ம் வீட்டில் அமர்வதால் மன உளைச்சல், விரக்தி, விரயம் வந்துபோகும். தலைசுற்றல் ஏற்படும். அவ்வப்போது குடும்ப வாழ்க்கையில் பற்றில்லாமல் போகும். எவ்வளவு பணம் வந்தாலும் பணத்தட்டுபாடு இருக்கும்.
 
மனைவிக்கு ஃபைப்ராய்டு, முதுகுத்தண்டில் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துபோகும். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்க்கப் பாருங்கள். யாரை நம்புவது என்கிற மனக் குழப்பத்திற்கு ஆளாவீர்கள். சிலர் நல்லவர்களைப் போல் பழகி உங்களை ஏமாற்ற வாய்ப்பிருக்கிறது.  
டிசம்பர் 15 வரை அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் திடீரென்று அறிமுகமாகும் நபர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. நகை, பணம், முக்கிய சொத்து ஆவணங்களையெல்லாம் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைப்பது நல்லது. 
 
வீட்டில் களவுப் போக வாய்ப்பிருக்கிறது. வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை வரும். பழைய பிரச்னைகளெல்லாம் மீண்டும் வந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது மற்றவர்களைப்போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். நெஞ்சு வலி, ஹார்மோன் பிரச்னை, ஆழ்ந்த உறக்கமின்மை வந்துபோகும். கை, கால் மரத்துப் போகும். குறுக்கு வழியில் ஆதாயம் தேட வேண்டாம். 
 
டிசம்பர் 16ந் தேதி முதல் சனி உங்களின் ராசிக்கு 9ம் வீட்டில் நுழைவதால் மனப்போராட்டங்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் விலகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தவர், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். 
 
வைகாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பணவரவு அதிகரிக்கும். வேலை கிடைக்கும். சொத்து அமையும். வியாபாரத்தில் சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு லாபம் கணிசமாக உயரும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் புதியவர்களை நம்பி முதலீடுகள் செய்து ஏமாற வேண்டாம். ஆனால், ஜூன் 13ந் தேதி முதல் ராசிநாதன் குரு உச்சமடைவதால் லாபம் இரட்டிப்பாகும். கடையை மாற்றுவீர்கள். சிலர் விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்களின் தொந்தரவுகள் குறையும். பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்க புதுத் திட்டங்களை செயல்படுத்துவீர்கள். 
 

கல்வி, ஸ்டேஷனரி, உணவு, ரியல் எஸ்டேட், வாகன உதிரிபாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயமுண்டு. வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. ஜூன் 13ந் தேதி முதல் குரு 5ல் அமர்வதால் உத்தியோகத்தில் பழைய சிக்கல்களெல்லாம் பனியாக விலகும். உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. என்றாலும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்ன சின்ன விசாரணைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும். உங்கள் வேலையை மற்றொருவரிடம் ஒப்படைக்க வேண்டாம். 
 
கலைத்துறையினரே! கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம். பெரிய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த கலைஞர்களை உங்களை அருகே அழைத்துப் பாராட்டுவார்கள். எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பவர்களை அதிகம் நம்ப வேண்டாம். 
 
மாணவ-மாணவிகளே! புத்தகத்தை பிரித்தாலே தூக்கம் வந்ததே! இனி உற்சாகமாக படிப்பீர்கள். விளையாட்டில் பதக்கம் உண்டு. கூடா நண்பர்களை தவிர்த்து நல்ல நட்புச் சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மற்ற மாணவர்களோடு எப்போதும் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்த வருடக் கல்வியைப்பற்றி இப்போது சில திட்டங்களை தீட்டி வைத்துக் கொள்வது நல்லது. 
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வேலைக் கிடைக்கும். பெற்றோரின் விருப்பப்படி திருமணம் முடியும். முகப்பரு, பசியின்மை, ஹார்மோன் கோளாறுகள் வந்து நீங்கும். காய், கனிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 
இந்த ஜய வருடம் முற்பகுதி கடினமாக இருந்தாலும் பிற்பகுதி மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். 
 
பரிகாரம் :  சங்கரன்கோவில் கோமதி அம்மனை குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உங்களால் இயன்ற அளவு உதவியைச் செய்யுங்கள்.