1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (14:21 IST)

ஜய வருட ராசி பலன்கள் - துலாம்

எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று நினைக்கும் பொதுவுடைமைவாதிகளே! உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வலுவாக 5ம் வீட்டில் நிற்கும்போது இந்த ஜய வருடம் பிறப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். புதிய யோசனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். அனுபவப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். 
 
மழலை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தந்து உற்சாகப்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். இந்த வருடம் உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12ம் வீட்டில் பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். வெளியூர் பயணங்கள் உண்டு. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சில நாட்களில் தூக்கம் குறையும். பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனதை வாட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த கோயில்களுக்கு குடும்பத்தாருடன் சென்று வருவீர்கள். வீட்டை விரிவுப் படுத்திக் கட்டுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 
 
ஜூன் 12 வரை குருபகவான் 9ம் வீட்டில் நிற்ப தால் பிரச்னைகளை தொலைநோக்குப் பார்வையு டன் தீர்க்கும் சூட்சுமத்தை உணர்வீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை விரைந்து முடிப்பீர்கள். வங்கிக் கடனின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகள் அமைவார். மகளின் உயர்கல்வி சிறப்பாக அமையும். 
 
உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். ஜூன் 13ந் தேதி முதல் குரு 10ம் வீட்டில் நுழைவதால் யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் ஏமாற்றங்களை உணர்வீர்கள். எல்லோரும் பாரபட்சமாக உங்களிடம் நடந்து கொள்வதாக குறைக் கூறுவீர்கள். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்வதாக இருந்தால் நகை, பணத்தையெல்லாம் வங்கியில் பாதுகாப்பாக வைத்துச் செல்வது நல்லது. வீட்டில் களவுபோக வாய்ப்பிருக்கிறது. சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம்.  
 

ஆனி, ஆடி, ஆவணி, மார்கழி, பங்குனி மாதங்களில் செல்வாக்கு கூடும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 7ம் வீட்டிலும், ராகு ராசியிலேயும் நீடிப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்துபோகும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். மற்றவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு உங்கள் மனைவியை சந்தேகப்படாதீர்கள். மனைவிக்கு முதுகுத் தண்டு, அடி வயிறு மற்றும் கணுக்கால் வலி வந்துபோகும். மனைவி வழி உறவினர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். ஜூன் 21ந் தேதி முதல் ராகு உங்கள் ராசியை விட்டு விலகி 12ல் மறைவதாலும், கேது ராசிக்கு 6ல் அமர்வதாலும் தடைகள் நீங்கும். மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். விலகி நின்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். குடும்பத்தில் இருந்த சல சலப்புகள் குறையும். 
 
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். திடீர் பயணங்கள் உண்டு. சிலருக்கு அயல்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு வரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். டிசம்பர் 15 வரை சனி பகவான் உங்கள் ராசிக்குள் உச்சம் பெற்று அமர்ந்திருந்தாலும் ஜென்மச் சனியாக இருப்பதால் உடல் நலம் பாதிக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். எண்ணெயில் பொரித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள். தலைச்சுற்றல், எலும்புத் தோய்வால் அவதிப்படுவீர்கள். 
 
பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் முன்பு வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரிகளையெல்லாம் கால தாமதமின்றி செலுத்தப் பாருங்கள். டிசம்பர் 16 முதல் பாதச் சனி தொடங்குவதால் பார்வைக் கோளாறு, பேச்சால் பிரச்னை, குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வந்துபோகும். காலில் அடிபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். 
 
சித்திரை, ஐப்பசி, மாசி மாதங்களில் அலைச்சல், வீண் டென்ஷன், குழப்பங்கள் வந்து போகும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். வேலையாட்களுடன் போராட வேண்டியது வரும். அயல்நாட்டிலிருப்பவர்கள் திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி புது தொழில், புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும். வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். சிறியதாக கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ரியல் எஸ்டேட், பழைய இரும்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயமடைவீர்கள். மார்கழி மாதத்திலிருந்து வியாபாரம் சூடுபிடிக்கும். பற்று வரவு உயரும். 
 

ஜூன் 12 வரை குரு 9ல் நிற்பதால் உத்தியோகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஜூன் 13ந் தேதி முதல் 10ல் குரு நுழைவதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சின்னச் சின்ன அவமானங்கள், மனக் கலக்கங்கள் வந்துபோகும். உங்களைவிட அனுபவம் குறைவானவர்கள், வயதில் சிறியவர்களிடமெல்லாம் நீங்கள் அடங்கிப் போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள். 
 
கலைத்துறையினரே! மறைமுகமாக போட்டிகள் இருக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். 
 
மாணவ-மாணவியர்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவியல், கணிதப் பாடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்காதீர்கள். விடைகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கலை, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள்.  
 
கன்னிப் பெண்களே! புதிய நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியடைவீர்கள். கூடாப் பழக்க வழக்கங்களை தவிர்த்து விடுங்கள். பெற்றோரிடம் எதையும் மறைக்க வேண்டாம். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக் கூடும். 
 
இந்த ஜய வருடம் முற்பகுதி செல்வத்தையும் பிற்பகுதி செல்வாக்கையும் தருவதாக அமையும். 
 
பரிகாரம் :  ஈரோடுக்கு அருகேயுள்ள திருச்செங்கோடு தலத்தில் அருள்பாலிக்கும் அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக் கீரையைக் கொடுங்கள்.