1. ஆன்மிகம்
  2. »
  3. ஜோ‌திட‌ம்
  4. »
  5. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By K.P.Vidhyadharan
Last Updated : சனி, 12 ஏப்ரல் 2014 (14:51 IST)

ஜய வருட ராசி பலன்கள் - கும்பம்

உள்ளம் அழுதாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நகைச்சுவையாக பேசுபவர்களே! உங்கள் ராசிக்கு 5ம் வீட்டில் குரு வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஜய வருடம் பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். 
 
வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். மனைவி உங்களின் புதுத் திட்டங்களை ஆதரிப்பார். மனைவி வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். உங்கள் ராசிக்கு 8ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலுடன் ஆதாயமும் உண்டாகும். சவால்களை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். அதிக வட்டிக் கடனை குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி பைசல் செய்வீர்கள்.
 
ஆனி, ஆடி, ஆவணி மாதப் பிற்பகுதி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் ஓரளவு பணவரவும், பதவியும் வந்து சேரும். மகளுக்கு திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 8ல் செவ்வாய் நிற்கும்போது ஜய வருடம் பிறப்பதால் அடிவயிற்றில் வலி, சிறுசிறு விபத்துகள், சகோதர வகையில் மனத்தாங்கல், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்துபோதும். இரவு நேரப் பிரயாணங்களின் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதுபோல சுயமாக வாகனத்தை ஓட்டும்போது வேகத்தை குறைத்து ஓட்டுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம்.
 
ஜூன் 12ந் தேதி வரை குருபகவான் சாதகமாக இருப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சீரும், சிறப்புமாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். ஜூன் 13ந் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் மறைவதால் வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்ப மிட்டு வைக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்த முயற்சிப்பார்கள். 
 

புகழ், கௌரவம் குறைந்துவிடுமோ என்ற ஒரு அச்சம் வரும். தன்னம்பிக்கை குறையும். சில நேரங்களில் நெருக்கடிகளையும், தர்மசங்கடமான சூழ்நிலை களையும் சமாளிக்க வேண்டியது வரும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். ஜூன் 20ந் தேதி வரை கேது உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் தைரியம் கூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்குவீர்கள். சொத்துச் சேர்க்கையும் உண்டு. ஆன்மிக விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். ஷேர் மூலமாக பணம் வரும். 
 
வேற்றுமதத்தவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். ஆனால், ராகு 9ம் வீட்டில் நீடிப்பதால் தந்தைக்கு வேலைச்சுமை, டென்ஷன், அவருடன் கருத்து மோதல்கள், வீண் விரயம் வந்துபோகும். சேமிப்புகள் கரையும். ஜூன் 21ந் தேதி முதல் கேது உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலும், ராகு 8லும் மறைவதால் யதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்து கொண்டு உங்களை விமர்சிப்பார்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல்வலி வந்துபோகும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்துபோகும். 
 
டிசம்பர் 15ந் தேதி வரை உங்கள் ராசிநாதனான சனிபகவான் 9ம் வீட்டில் நிற்பதால் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் வெளிவருவீர்கள். பிதுர்வழிச் சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். வழக்கில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். தந்தை வழியில் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைக்கும். உள்மனதில் தொக்கி நிற்கும் தாழ்வுமனப்பான்மையை தூக்கி எறிவீர்கள். புது வேலை கிடைக்கும். டிசம்பர் 16ந் தேதி முதல் 10ம் வீட்டில் சனி நுழைவதால் வீண் வதந்திகள், அக்கம்-பக்கம் வீட்டாருடன் பிரச்னைகள் வந்துபோகும். 
 
வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். புதிது புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். லாபம் கணிசமாக உயரும். ஆழம் தெரியாமல் பெரிய முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். தேங்கிக்கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். லாபத்தை அதிகப்படுத்த விளம்பரம் மற்றும் நவீன யுக்திகளை கையாளுங்கள்.

தற்போதைய மார்க்கெட் நிறுவனங் களை புள்ளி விவரங்களாக தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள். வேற்றுமதத்தவர்களின் உதவி மற்றும் கடன் உதவியால் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். அரசாங்கத்தால் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். புது ஏஜென்சியை யோசித்து எடுக்கப் பாருங்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். எந்த பிரச்னையாக இருந்தாலும் மனதிலுள்ளதை மறைக்காமல் பேசி விடுவதுதான் உங்களுக்கும் பங்குதாரருக்கும் நல்லது. 
 

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களை குறை கூறிக் கொண்டிருந்த மேலதிகாரியின் மனசு மாறும். என்றாலும் சக ஊழியர்களின் விடுப்பால் மற்றவர்கள் வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டியது வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தாமதமாகும். உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய சலுகைகளை போராடிப் பெறுவீர்கள்.  
 
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி முன்னேறப் பாருங்கள். கடுமையான உழைப்பை முதலீடாகச் செய்யுங்கள். சமயம் வரும்போது எல்லாமும் நல்ல முறையில் நடக்கும். மூத்த கலைஞர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.
 
மாணவ-மாணவிகளே! மொழியறிவுத் திறனையும் பொது அறிவையும் நிறைய வளர்த்துக் கொள்ளுங்கள். அன்றைய பாடங்களை அன்றே முடிப்பது நல்லது. வகுப்பறையில் ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்கத் தயங்காதீர்கள். கெட்ட நண்பர்களை அறவே ஒதுக்கிவிட்டு படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பள்ளி மாற வேண்டியது இருக்கும். போராடி சில பாடங்களில் வெற்றி பெறுவீர்கள்.    
 
கன்னிப் பெண்களே! சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். திருமணம் கொஞ்சம் தாமதமானாலும் நல்லபடியாக முடியும். 
 
இந்த ஜய வருடம் நினைத்ததை நிறைவேற்றுவதுடன் உங்களின் செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகப்படுத்தும்.
 
பரிகாரம் :  தஞ்சாவூருக்கு அருகேயுள்ள தென்குடித்திட்டையில் அருளும் குருபகவானை தரிசித்து வாருங் கள். சாலைப் பணியாளர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்.