செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By

மக்கள் சேவை மகேசன் சேவை - விவேகானந்தர்

ஏழைகளும் வறியவர்களும் படும் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு யார் உள்ளம் கசிந்து உருகுகிறதோ, யாருக்கு அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடனடியாக ஏற்படுகிறதோ அவர்களே உண்மையான தேச பக்தர்கள். தேச சேவை செய்வதற்குத் தகுதியானவர்கள். அவர்களே மகாத்மாக்கள்.
கடவுள் ஒவ்வொரு ஜீவனிலும் இருக்கிறார். இதைத் தவிட தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. மக்களுக்கு ஒருவன் செய்யும் சேவை அந்த மகேசனுக்கே செய்யும் சேவையாகும். இதுவே உண்மை.
 
யார் ஒருவர் எதைப் பெறுவதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதை அடையவிடாமல் தடுப்பதற்கு, பிரபஞ்சத்தில் உள்ள எந்த  சக்தியாலும் முடியாது.
 
உண்மை, தூய்மை, சுயநலமின்மை இது மூன்றும் யாரிடமெல்லாம் இருக்கிறதோ அவர்களை நசுக்கக் கூடிய சக்தி விண்ணுலகு,  மண்ணுலகு என எந்த உலகிலும் இல்லை. ஏன் பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் கூட அவர்களை வெல்ல முடியாது.
 
உங்கள் வாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மை உள்ளதாகவும் இருந்தால் மட்டுமே நீங்கள் வாழும் சமுதாயம் தூய்மை உடையதாக இருக்கும். ஆகவே முதலில் உங்களை நீங்கள் எண்ணத்தாலும் செயலாலும் தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியம்.
 
சிந்தித்து செயலாற்றத் தெரிந்தவன் அதன் வழிச் செல்கிறான். மற்றவன் விதியைக் குறை சொல்கிறான். நம் விதியை நாமே  தான் வகுத்துக் கொள்கிறோம். ஆகவே அதற்குப் பிறரைத் தூற்றுவதில் பயனில்லை.  
 
நீ கடவுள் நம்பிக்கை உடையவனோ, அல்லது இறைப்பற்று இல்லாத நாத்திகனோ, எதுவாக இருந்தாலும் சரி, உன் சுக துக்கங்களையும் சுயநலத்தையும் மறந்து உன் கடமைகளை நீ சரிவரச் செய்து வந்தால் போதும். அதுவே மிகப் பெரிய தேச  சேவையாகும்.