செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (15:09 IST)

பூட்டிய வீட்டில் இளம்பெண் படுகொலை; தார்ப்பாயில் சுருட்டி வைத்து தப்பிச் சென்ற மர்ம நபர்

பூட்டிக் கிடந்த வீட்டில் சமையல் அறையில் இளம்பெண்ணை கொலை செய்து, மர்ம நபர் ஒருவர் பிளாஸ்டிக் தார்ப்பாயில் சுருட்டி வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
 

 
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டித்தெருவில் உள்ள வீட்டில் அகிலேஷ் என்ற அஜய் (45) என்பவர் வாடகைக்கு குடி வந்துள்ளார். அவருடன் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் அந்த வீட்டில் இருந்துள்ளார்.
 
இந்நிலையில், அஜய் உடல்நலம் குன்றியுள்ள தன் தந்தையை பார்க்கச் செல்வதாக கடந்த வாரம் கூறி சென்றுள்ளார். இதற்கிடையில் நேற்று அந்த வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை வீட்டைக் கவனித்து வந்த சுடலையாண்டியிடம் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து சுடலையாண்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல் துறையினர் உள்ளே சென்று பார்த்தபோது இளம்பெண் ஒருவர் சமையல் அறையில் பிளாஸ்டிக் தார்ப்பாயில் சுருட்டி வைத்திருப்பது தெரிய வந்தது.
 
அந்த பெண்ணின் ஆடைகள் கலைந்திருந்தன. பின்னர் பிணத்தை, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த வீட்டிற்கு பகல் நேரங்களில் சில பெண்களும், இரவு நேரத்தில் ஆண்களும் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதனால் அங்கு பாலியல் விவகாரங்கள் நடந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
 
மேலும், அந்த வீட்டில் குடியிருந்த தலைமறைவாகியுள்ள அஜய் பற்றிய தகவல்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.