1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 17 ஜூன் 2015 (16:17 IST)

ஃபேஸ்புக்கில் ஏமாந்த இளம்பெண்; 2 குழந்தைகளுக்கு தந்தையானவரை திருமணம் செய்த கொடுமை

ஃபேஸ்புக்கில் ஏற்பட்ட காதலை அடுத்து, 2 குழந்தைகளுக்கு தந்தையானவர் இளம்பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
 

 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா நாராயணப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி (29) என்பவரும், திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த சித்ரா (28) என்பவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாகி உள்ளனர். பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட இந்த பழக்கம் பிறகு காதலாக மாறியுள்ளது. இந்த காதல் 2 ஆண்டுகள் தொடர்ந்துள்ளது.
 
இதனையடுத்து, பழனிச்சாமி சித்ராவின் பெற்றோரை நேரில் சந்தித்து தங்களது காதல் குறித்து கூறியுள்ளார். மேலும், தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதாகவும், அதனால் சித்ராவை உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சித்ராவின் பெற்றோர்களும் இதற்கு சம்மதம் தெரிவிக்க, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
 
பிறகு, இருவரும் கள்ளிப்பட்டியில் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையில், அவ்வப்போது பழனிச்சாமி தனது பெற்றோரை பார்த்து வருவதாக கூறிவிட்டு தனது சொந்த ஊரான நாராயணப்பாளையத்துக்கு சென்றுவந்துள்ளார்.
 
இந்நிலையில், திடீரென 2 வாரமாக பழனிச்சாமி வீட்டுக்கு வராததை அடுத்து, அதிர்ச்சியடைந்த சித்ரா, பழனிச்சாமியின் சொந்த ஊருக்கு சென்று விசாரித்ததில், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்பதும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.
 
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சித்ரா, தன்னுடைய கணவர் பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து, பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் அவரை தேடிவருகிறார்கள்.