1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 20 ஜூலை 2017 (11:54 IST)

வரதட்சணைக் கொடுமை - இளம்பெண் அடித்துகொலை

வரதட்சணை கொடுமையால் ஒரு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் மன்னார்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் இளஞ்சேரன். இவர் திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் என்பவரின் மகளுமான திவ்யாவிற்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அவர்களுக்கு இரண்டரை வயது மகன் இருக்கிறான்.
 
அவர்களின் திருமணத்தின் போது 100 சவரன் நகையோடு ரூ.10 லட்சம் பணம்  மற்றும் அரைகிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்ற இளஞ்சேரனுக்கு பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.
 
ஆனாலும், தன்னுடைய மகன் மருத்துவர் என்பதால், இன்னும் அதிகமாக வரதட்சணை தரவேண்டும் என இளஞ்சேரனின் பெற்றோர், அவ்வப்போது திவ்யா குடும்பத்தினரை வற்புறுத்தி வந்துள்ளனர். மேலும், திவ்யாவையும் கொடுமை செய்துள்ளனர். 
 
இந்நிலையில், நேற்று வீடு திரும்பிய இளஞ்சேரன் தனது மனைவி திவ்யா மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு, அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
இதற்கிடையே திவ்யாவின் முகத்தில் ரத்த காயங்கள் இருந்ததாகவும், இளஞ்சேரனின் பெற்றொர், அவரை அடித்து கொலை செய்துவிட்டனர், அவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி திவ்யாவின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, இளஞ்சேரனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதில், திவ்யாவை அடித்து துன்புறுத்தியதில் அவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார் என்பது தெரியவந்தது. 
 
இதையடுத்து, இளஞ்சேரன், அவரின் பெற்றோர் என அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களை மன்னார்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
 
இந்த விவகாரம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.