வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By சினோஜ்கியான்
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (16:21 IST)

தமிழகத்தில் காங்கிரஸ் எழுச்சி பெறுமா ...? அல்லது பாஜக தலைதூக்குமா... ?

இந்தியாவில் பிரிட்டிஸார் ஆட்சி நடைபெற்ற போது, ஒட்டுமொத்த மக்களையும், நாட்டுத்  தலைவர்களையும், ஒன்றிணைக்கும் ஆயுதமாக இருந்த முக்கியமான ஆயுதமாக இருந்த இயக்கம்தான் காங்கிரஸ். பல தியாகிகளின் போராட்டம், தியாகத்திற்குப் பின்னர் நமக்குச் சுதந்திரம் கிடைத்தது. 
அந்த சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் என்ற பேரியக்கத்தைக் களைத்துவிடும்படி மகாத்மா காந்தி கூறினார். ஆனால் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. அதன்பிறகு நாட்டின் முதல் பிரதமரானார் நேரு. நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க பல கஷ்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், நேரு தன்னை ஒரு ஆளுமையாக முன்னிருத்தி எல்லா தடைகளையும் தகர்த்து நாட்டின் முன்னேற்றத்திற்கு, ரஷ்யாவைப் போன்று ஐந்தாண்டுகாலத் திட்டங்களைத் தீட்டினார். இன்றுவரை அது தொடர்கிறது.
 
ஆனால், அதன்பின்னர் வந்த காங்கிரஸ் இயக்கம்தான் தன் வளர்ச்சியில் தேய்ந்துபோயுள்ளது. இதற்கு சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வியே உதாரணம்.
 
இந்த நிலையில், சுதந்திர இந்தியா காலத்தில் தலையெடுத்த ஜனதா சங்கம்,அதன் பின்னர் ஜனசங்க தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு, காங்கிரஸுக்கு மாற்றாக உருபெற்றுள்ளது பாஜக.
 
ஆரம்பத்தில் சிறுதளிராய் வளர்ந்த பாஜக, இன்று தன் அரசியல் கிளையை, நாடு முழுவதும் பெருங்கிளையாய் வியாபித்துள்ளது. அதன் வளர்ச்சிக்கு முன்னாள் காங்கிரஸாரால் ஈடுகொடுக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் போதுமான ஆளுமைத்தலைவர்கள்  இருந்தும்கூட ஊழல்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இன்று பெருமளவு மக்கள் மத்தியில் தம் செல்வாக்கைக் குறைத்துக்கொண்டன. இதுவே, மோடி தலைமையிலான பாஜகவின் அசுர வளர்சிக்குச் சாதகமாக அமைந்தது.
 
இந்த நிலையில், இன்று, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளதாவது :  ’காங்கிரஸை அழுத்தத்திற்கு உள்ளாக்க, எந்தக் கூட்டணிக் கட்சியாலும் முடியாது ’எனக் கூறியுள்ளார். 
 
அவர் கூறியபடி, எந்தக் கூட்டணி கட்சியும், அவர்களை அழுத்தவில்லை என்றாலும் கூட, தமிழகத்தில்,திராவிட கட்சிகளை எதிர்த்து களமிறங்குவதற்குப் பதிலாக, இன்னும் திமுகவின் முதுகில் ஏறித்தானே அக்கட்சி பயணம் செய்து வருகிறது என அரசியல் கேள்வி எழுப்பி  வருகின்றனர்.
 
சமீபத்தில், பாஜக தலைவர் தமிழிசைக்கு தெலுங்கானா கவர்னராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டது. அந்தக் கட்சியைக் குறித்த மதத்தோற்றம் இப்போது தமிழகமக்களிடம் மெள்ள மெள்ள தகர்ந்து வருகிறது. அதனால்தான் ஆன்மிக அரசியல் பேசிய ரஜினியைக் குறித்த பேச்சும் அக்கட்சிக்குள் கசிகிறது. 
 
இந்த நேரத்தில், காங்கிரஸார் விழித்துக்கொள்ளவில்லை என்றால், அவர்களை யாரும் அழுத்த வேண்டியதில்லை. மக்களே அவர்களைப் புறந்தள்ளுவார்கள். ஏனேன்றல் சமீபத்தில் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம் மீதான பணம் மோசடி வழக்கு மட்டுமல்லாமல் பல ஊழல் வழக்குகளில் அக்கட்சி தன் செல்வாக்கை இன்று பல மாநிலங்களில் இழந்துவரும் போது, தமிழகத்திற்கு மட்டும் இதொன்றும் புதிதல்ல.
 
இந்த ஊழலின் சிறு பிசிறு கூட தங்களை அண்டவிடாதபடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, செயல் தலைவர் நட்டா,மற்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆகியோர் கட்சியை வழிநடத்துகின்றனர்.
இருந்தாலும், ஒரே நாடு, ஒரே மதம் என்ற மதக் கலாச்சார நிர்பந்தத்துக்கு மக்களை ஆட்படுத்தாத வரை அவர்களின் அரசியல் சாம்ராஜ்யம் விரிவடையும். அதற்கு மாறாக மாநில மொழிகளில் குறுக்கீடும், அதிகாரப் பரவல்களின்  அடிப்படையில் சில அடக்குமுறைகளையும் பாஜக அரசு கையிலெடுத்தால், அடுத்த தேர்தலில் மக்களின் ஓட்டுமுத்திரை திசைமாற வாய்ப்புண்டு. ஏனென்றால் மக்கள் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பர். அந்த ஆட்சி சர்க்கரம்  சரிவர இயங்காதபொழுது தற்போதைய காங்கிரஸின் நிலையைப்போல் பாஜகவை ஓரங்கட்டும் ஜனநாயகத் தீர்ப்பை மக்கள், எனும் தீர்ப்பாளர்கள் , தேர்தல் சமயத்தில் ,தம் மை  விரல்களால்  எழுதவே செய்வர். 

தமிழகத்தில், இந்த இருபெரும் தேசியக் கட்சிகள் தம் ஆளுமையை சீர் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. குறிப்பாக பதவிக்கு கண்ணோட்டமிடும் காங்கிரஸார் கோஷ்டி பூசலில் சிக்கித் தவிப்பது; மதத்தையே ஆயுதமாக்கி அரசியல் செய்யும் தமிழக பாஜகவினர். எனவே, இவ்விரு கட்சிகளும்  தம் கொள்கையை தூக்கிப் பிடித்தால் மட்டும்தான்  இருபெரும் திராவிட  கட்சிகளுக்கு மாற்றாய்  காங்கிரஸ் எழுச்சிபெறும்! பாஜகவும் இங்கு தலைதூக்க வாய்ப்புகளுண்டு.