வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 31 டிசம்பர் 2016 (01:08 IST)

திமுகவில் இணைகிறாரா நடிகர் ஆனந்த்ராஜ்? - பரபரப்பு பேட்டி

அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் ஆனந்த ராஜ், வயோதிகம் காரணமாக ஏற்படும் மதிப்பின் அடிப்படையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.


 

அதிமுகவில் கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெயலலிதாவுக்கு பின்னர் கட்சி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதால், இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருடைய செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதை தொடர்ந்து ஆனந்தராஜ் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். கொலை மிரட்டல் காரணமாக உடனடியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஆனந்தராஜ் வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டது.

பின்னர், இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்த்ராஜ், ”அதிமுகவில் இருந்து விலகியதற்காக என்னை மிரட்டுவது என்ன நியாயம். அதிமுகவுக்கு தான் எப்போதும் அவப்பெயர் ஏற்படுத்தியது இல்லை.

கட்சியில் உள்ளவர்கள் யாரும் எனக்கு மிரட்டல் விடுக்கவில்லை, ஒருவேளை அப்படி யாராவது இருந்தால் கட்சி தலைமை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும், திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ”வயதின் மீதான அன்பின் காரணமாகவே திமுக தலைவர் கருணாநிதியைச் சந்திப்பேன் என்றும் அவரது உடல்நிலை குறித்து வாய்ப்பு கிடைக்கும் போது கேட்டறிவேன்” என்றும் குறிப்பிட்டார்.