1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (13:16 IST)

எஸ்.வி. சேகரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை - கனிமொழி கேள்வி

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரை காவல் துறையினர் ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கனிமொழி வினவியுள்ளார்.
நகைச்சுவை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் சமீபத்தில் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு பத்திரிகையாளர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்ததால் பின்னர் அந்த முகநூல் பதிவை நீக்கிவிட்டு தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார்.இருப்பினும் எஸ்.வி.சேகருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை பத்திரிகையாளர்கள் நடத்தினர். 
 
தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கம் காவல்துறையில் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.வி.சேகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 
 
இதனையடுத்து எஸ்.வி சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் எஸ்வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர், கனிமொழி பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட பிஜேபி உறுப்பினர் எஸ்வி.சேகரின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த பின்னும், காவல்துறை அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வியப்பளிக்கிறது என்றும் இழிவாக ஒரு பதிவு செய்துவிட்டு, பின்னர் அதை நீக்குவதும், வருத்தம் தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது.
 
விமர்சனம் செய்ய அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது, ஆனால் அவதூறு செய்ய அல்ல. காவல்துறை இவ்விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.