வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2024 (17:18 IST)

த.வெ.க மாநாட்டிற்கு தடையாக இருப்பது ஏன்.? விஜய் மீது திமுகவுக்கு பயம்.! தமிழிசை..!

Tamilsai
மாநாட்டுக்கு இடத்தை கொடுத்தால் மடத்தை பிடித்து விடுவார் என்பதால் நடிகர் விஜய்யை பார்த்து திமுக பயப்படுகிறது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
 
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்து பேசினார். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மரியாதை நிமித்தமாக ஆளுநரைச் சந்தித்தேன் என்று தெரிவித்தார்.   முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பு, தமிழகத்தில் புதிதாக எந்த நிறுவனமும் தொடங்கப்படவில்லை என்றும் யாருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
 
தற்போது வெளிநாடு சென்றிருக்கும் முதல்வர் ஸ்டாலின், அங்கு சென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பது, சைக்கிள் ஓட்டுவதையே பணியாக கொண்டிருக்கிறாரே தவிர, பெரிதாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டதாக தெரியவில்லை என்று தமிழிசை விமர்சித்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு இப்போது ஓரளவுக்கு முதலீடுகள் வருவதற்கு காரணம், பிரதமர் மோடி மீதான நல்லெண்ணத்தில் தான் என்று அவர் கூறினார்.
 
மாநாடு நடத்தவிட முடியாமல் விஜய் கட்சியை திமுக அரசு முடக்குகிறது என்றும் மாநாடு நடத்த இடம் கொடுப்பதில் திமுக அரசுக்கு என்ன பிரச்சினை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நடிகர் விஜய் பாவம் எனக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு முறையும் மாநாட்டுக்கான இடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார். 

விஜய் மீது ஏன் திமுகவுக்கு அவ்வளவு பயம் என்றும் மாநாடு நடத்த இடத்தை கொடுத்தால், மடத்தை பிடித்து விடுவார் என திமுக பயப்படுகிறது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.