1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (09:18 IST)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?

தமிழகத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கோரத் தாண்டவம் ஆடிய கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரணப் உதவிகளை அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 11 ஆம் தேதி கஜா புயல் குறித்த முன்னெச்சரிக்கை செய்தியை வெளியிட்டது. கடந்த காலங்களில் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் இம்முறை சிறப்பாக செயல்பட முடிவெடுத்த அதிமுக அரசு உடனடியாக புயல் தாக்கும் மாவட்டங்களில் முன்னெச்சரிககை நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். தேசிய பேரிடர் குழுவும் அந்தந்த மாவட்டங்களில் தயாராக வைக்கப்பட்டனர்.

நேற்றுக் காலை கரையைக் கடந்த கஜா புயல் தஞ்சை, நாகை, வேதாரன்யம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கோரத்தாண்டவம் ஆடியது. வீடுகள், மின் கம்பங்கள், விவசாய நிலங்கள், மரங்கள் என இந்த மாவட்டங்களில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதுவரை புயலுக்கு 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய்யும் நிவாரணம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆனால் தங்கள் வாழ்வாதாரத்தை பெருமளவில் இழந்துள்ள விவசாயிகளுக்கான நிவாரணம் குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. தஞ்சை, புதுக்கோட்டை, பேராவூரணி, ஆகிய பகுதிகளில் அதிகளவில் தென்னந்தோப்புகளும், பொங்கலை முன்னிட்டு பயிரிடப்பட்டிருந்த வாழைகளும் புயலுக்கு இரையாகியுள்ளன. இதனால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். எனவே அரசு விரைவாக செயல்பட்டு விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.