வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (16:39 IST)

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு எப்போது? - பரபரப்பு தகவல்

வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சசிகலாவின் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 

 
மேல்முறையீட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றத் தனி நீதிபதி குமாரசாமி, முழுமையாக ரத்து செய்தார். ஜெயலலிதாவின் சொத்துமதிப்பை குறைத்துக் கணக்கிட்டும், அரைகுறையாக விசாரணை நடத்தியும் நீதிபதி குமாரசாமி இந்த தீர்ப்பை வழங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
மேலும் கர்நாடக அரசு ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்பிரமணியசாமி ஆகியோர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட - நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவரவர் தரப்பு இறுதி வாதங்களை விரைவாகவும், சுருக்கமாகவும் எடுத்து வைக்க உத்தரவிட்டது.
 
அதன்படி கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, க.அன்பழகன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அந்தியர்ஜூனா, ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி யோர் தரப்பில் மூத்த வழக் கறிஞர் சேகர் நாப்தே ஆகியோர் வாதங்களை எடுத்து வைத்தனர்.
 
கர்நாடக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தனது வாதத்தை எடுத்து வைத்தார். வருமான வரித்துறை சார்பிலும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. இதன்பிறகு சுப்பிரமணிய சாமியும் தனது எழுத்துப் பூர்வ வாதத்தை சமர்ப்பித்தார்.
 
இதையடுத்து, இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி, எதுவும் அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
 
இதற்கிடையில், ஜெ. வழக்கில் ஆஜரான அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தனது சுயசரிதை நூலில், ‘சொத்துக் குவிப்பு வழக்கில் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன' என சொல்லியிருந்தார்.
 
இதனையடுத்து, தமிழக சேர்ந்த வழக்கறிஞர் பி.ரத்தினம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் ‘ஆச்சார்யா கூறியதால் அவரிடம் விசாரணைக்கு நடத்த வேண்டும்' என கூறியிருந்தார்.
 
இந்த வழக்கு கடந்த 8ஆம் தேதி விசாரணை வந்தபோது நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. ‘வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
 
மேலும், ‘இத்தனை நாட்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் காரணம் என்ன என ரத்தினத்தின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதிலளித்த நீதிபதிகள் ‘ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த 4 வாரத்தில் தீர்ப்பு வெளியிடப்பட உள்ளது என செப்டம்பர் 8ஆம் தேதி குறிப்பிட்டனர். எனவே அக்டோபர் 7ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.