1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (11:45 IST)

ஹெலிகாப்டர் வழியாக உணவு தருவதில் என்ன பிரச்சினை? – விமானிகளோடு எம்.பி சு.வெங்கடேசன் உரையாடல்!

Su Vengadesan
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக உணவு வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமானிகளோடு உரையாடியுள்ளார்.



தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகியவற்றில் கடந்த சில தினங்கள் முன்பு பெய்த எதிர்பாராத அதிகனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கி வெளியேற இயலாமல் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வாறாக அளிக்கப்படும் உணவுகள் அதிக உயரத்திலிருந்து வீசப்படுவதால் பொட்டலங்கள் கீழே விழுந்து சிதறுவதாகவும், மக்கள் பலர் உணவின்றி வாடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஹெலிகாப்டரை இயக்கும் விமானிகளோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உரையாடியுள்ளார்.

அப்போது விமானிகள் மக்களுக்கு நெருக்கமாக சென்று உணவை வழங்க முயற்சிப்பதாகவும், ஆனால் அப்படி நெருங்கி செல்கையில் மரங்கள் சாய்வது, கூரை, ஓடுகள் பறப்பது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்வதாகவும், தொலைவில் இருந்து முயற்சித்தால் உணவு பொட்டலங்கள் சிதறுவதாகவும் வருத்தம் மற்றும் ஆற்றாமையோடு கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் அந்த தவிப்பும், ஆற்றாமையும்தான் மனிதனுக்கான அடையாளம் என அவர் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K