வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (13:11 IST)

எச்.ராஜாவின் மோசமான பேச்சு : எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

மத்தியில் பா.ஜ.கவின் ஆட்சி நடைபெற்று வருகின்ற நிலையில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் என்று பலரும் பலவிதமான சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறிவருகின்றனர். அந்த வரிசையில் எச்.ராஜாவின் பேச்சுக்களும், சமூக வலைதளங்களில் அவரால் இடப்படும் பதிவுகளும் மக்கள் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.

சமூகத்தில் முக்கியமான பொறுப்புகளிலும், பதவிகளிலும் அங்கம் வகிப்பவர்கள் இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இதற்கு நேர்மாறான முறையில் பா.ஜ.க-வின் தேசிய செயலாளராக இருக்கும் எச்.ராஜாவின் செயல்பாடு உள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க வேண்டி பாஜகவினர் போலீஸாரிடம் முறையாக அனுமதி கோரியுள்ளனர். ஆனால் அது மசூதி உள்ள இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவினருக்கு   அங்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேடை அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த காரணத்தால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் நீதிமன்றம் கூறியுள்ள அறிவுரையை மதிக்காமலும், பிற மதங்களைப் பற்றி அவதூறு பரப்புகின்ற வகையிலும் காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை இழிவு படுத்தும் வகையில் உணர்சிவசப்பட்டு அவர் பேசியுள்ளதைக் கண்டித்து திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

"ஹைகோர்ட்டாவது………..என்று பேசியுள்ள ஹெச்ராஜா வின் மீது என்ன நடவடிக்கை? இது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா? ஆளுங்கட்சி என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? ' என்று கடுமையாக விமர்சித்துள்ளார் சுப.வீரபாண்டியன். பல அரசியல் தலைவர்கள் எச்.ராஜாவின் இந்த பண்பற்ற செயலைக் கண்டித்து கருத்து கூறியுள்ளனர். ஆனால் இதுவரைக்கும் எச்.ராஜா மீது எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.