1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (18:48 IST)

தண்ணீர் சிக்கனம் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா! மாணவர்கள் உற்சாகம்!

கருவூர் திருக்குறள் பேரவை சார்பில் "தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம் " என்கின்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த போட்டிக்கு பதினெட்டு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த 864 பேர் பங்கு பெற்றனர் இவர்களில் 30 பேருக்கு பரிசு சான்றிதழ் வழங்கும் விழா கருவூர் சவஹர் கடை வீதியில் உள்ள ஆரியாஷ் உணவு விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கருவூர் திருக்குறள் பேரவை புரவலர் ஆரா. பழ.ஈசுவரமூர்த்தி தலைமை தாங்கி., பேசினார். அப்போது., பள்ளி மாணவ மாணவிகள் கல்வி யொடு ஒழுக்கம் பண்பாடு கலாட்சாரம் போற்றி தாய் தந்தையரை மதித்து திருக்குறள் கூறும் நெறிப்படி வாழ வேண்டும் என்றார். அரசு வழக்கறிஞர் சு.கரிகாலன் பேசிய போது., தலைப்பையொட்டி தடம் மாறாமல் பேச வேண்டும் என்றார் வழக்கறிஞர் தொழிலிற்கு பேச்சு முக்கியம் அதை நான் பள்ளி கல்லூரிப் பருவத்திலேயே வளர்த்துக் கொண்டேன் என்றார். 
 
இதையொட்டி கல்லூரி  பேராசிரியை இளவரசி., கவிஞர் நன்செய்புகழுர் அழகரசன், க.ப.பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் மல்லிகாசுப்பராயன், யோகா திருமூர்த்தி, நீலவர்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் கருவூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழநியப்பன் பேச்சு எழுத்து கலை பயிற்சி உரை ஆற்றினார் உரையின் போது., பேச்சும், எழுத்தும் மிகச் சிறந்த கலைகள் ஆகும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். பேச்சுக்கலை ஒருவனை உயர்த்திக் காட்டும் உன்னதம் கொண்டதாகும்
 
சரியான உச்சரிப்பு, தகுந்த மேற்கோள்கள், உயரிய ஒப்பீடுகள், இவற்றோடு நகைச்சுவையும் ரசனையும் சேர்த்து பேசினால் கேட்போர் வயப்படுவர்.
 
பேச்சாற்றலில் நாம் சிறக்க நிறைய நூல்கள் வாசிக்க வேண்டும், பல சான்றோர் உரைகளை கேட்க வேண்டும் உடல் மொழி பேச்சோடு ஒன்றிட வேண்டும்.
 
வெற்றுச் சொல் வேற்றுச் சொல் தவிர்க்க வேண்டும். நல்ல குரல் வளம் பேண வேண்டும், பேசும் போது முகமலர்ச்சி இருக்க வேண்டும். பல முறை பேசிப் பலகினால் இவை கைகூடும். மேலும் எழுத்தும் மிகச் சிறந்த கலையாகும். பல பேச்சுக்கள், எழுத்துக்கள் சுதந்திர போராட்ட களத்திலே, மொழிப்போர்களத்திலே புரட்டிப் போட்ட வரலாறு உண்டு. பேச்சுக்கூட எழுத்தானால் தான் வளரும் தலைமுறைக்கு வரலாறு ஆகும். 
 
கட்டுரை எழுதுகிற போது கையெழுத்து படிக்கின்ற திருத்துகிறவர்களை விரும்பிப் படிக்க திருத்தச் செய்கிற எழுத்தாய் அடித்தல் திருத்தல் தவிர்த்து, முக்கியச் செய்திகளுக்கு அடிக்கோடிட்டும். அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி, ஆச்சரியக் குறி , கேள்விக்குறி உரிய இடத்தில் இடம் பெறச் செய்தும், கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும் கலை உணர்வொடு ஏழுதுகிற கட்டுரை பாராட்டுப் பெறும் என்றார். சிறப்பு விருந்தினர் அரசு வழக்கறிஞர் சு.கரிகாலன் மிக அதிக கட்டுரைகள் தந்த கரூர் மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பாலகிருஷ்ணனுக்கு சிறப்பு விருதும் முப்பது மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர்கள் தமிழ் இலக்கிய அமைப்பினர் திரளாக பங்கேற்றனர். பியூபா நிறுவனம், மாரியம்மன் எசுகேசன் டிரஸ்ட் மற்றும் ஆரா இண்டர்நேஷனல் உள்ளிட்ட நிறுவனங்களும் இணைந்து பரிசுகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.