வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2017 (12:30 IST)

கோவை போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஊடுருவலா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள், இளைஞர்கள் கோவை, வ.உ.சி., மைதானத்தில் திரண்டு 5 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை சீர் குலைக்கும் நோக்கத்துடன், சில கும்பல்கள் ஊடுருவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


 

வ.உ.சி. மைதானத்தில், சாதி, மத, அரசியல் பேதமின்றி மாணவர்கள் கூடி, தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். இதில், முதல் நாளிலேயே, சங்பரிவாரை சேர்ந்த ஒருவர் மோடி அரசுக்கு எதிராக முழக்கமிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். அவர், உடனடியாக வெளியேற்றப்பட்டார்.

பின்னர், மாணவர்களுடன் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து சங்பரிவார் இளைஞர்கள் சிலர் கெட்ட வார்த்தைகளில் கோஷமிடுவது, பெண்களை சீண்டுவது, பத்திரிகையாளர்களை மிரட்டுவது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிடக்கூடாது என்றும், பீட்டாவை மட்டும் திட்டுங்கள் என்றும் நெருக்கடி கொடுப்பதென்று தொடர்ந்து இடையூறு செய்துள்ளனர்.

இதன் உச்சமாக, சன் செய்தியாளரை தாக்கி, கேமராவை பறித்துள்ளனர் சிலர். பெண் செய்தியாளர்கள் சிலரை, தரக்குறைவாக பேசி சீண்டியுள்ளனர். பெருங்கூட்டம் என்பதால் அவர்களை கண்டறிவதில் சிரமம் இருப்பதாக போராட்டக்குழுவினர் கூறுகின்றனர்.

பல்வேறு குளறுபடிகளை செய்தும் போராட்டத்தை சீர்குலைக்க முடியாத நிலையில், பத்திரிகையாளர்கள் அதிலும் குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களிடம் சீண்டுவது என முடிவு செய்து களம் இறக்கிவிடப்பட்டு இருக்கிறது தெரிய வந்திருக்கிறது.

’இதுபோல் திட்டமிட்டு வன்முறையை உருவாக்க விரும்பும் சில சுயநல சக்திகளின் முயற்சி வெற்றியடைந்து விடக்கூடாது. கண்டிப்பாக இவர்கள் ஏதாவது பின்புலத்துடன் இந்த நடவடிக்கைகளில் தொடர்ந்து இறங்கக் கூடும்.

பத்திரிக்கையாளர்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும் இதனை பிரச்சனையாக்கி போராட்டக்களத்தை திசைதிருப்ப வேண்டாம்’ என்று தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களே கோவை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்து இருக்கின்றனர்.