1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 12 மே 2017 (12:35 IST)

சசிகலாவுக்கு சிறையில் பிரச்சனையை ஏற்படுத்திய விவேக்!

சசிகலாவுக்கு சிறையில் பிரச்சனையை ஏற்படுத்திய விவேக்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசியை கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 23 பேர் 19 முறை சென்று பார்த்திருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது.


 
 
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்த தகவல் பெறப்பட்டது. சிறை விதிப்படி ஒரு கைதியை மாதத்துக்கு 4 முறை தான் சந்திக்க முடியும். ஆனால் சசிகலா மற்றும் இளவரசியை சந்திக்க எப்படி 19 முறை அனுமதிக்கலாம் என்ற சர்ச்சை எழும்பியது.
 
இதனால் உஷாரான சிறை நிர்வாகம் யாராக இருந்தாலும் மாதத்திற்கு 4 முறைக்கு மேல் சந்திக்க அனுமதிக்க கூடாது என கண்டிப்புடன் கூறிவிட்டது. இந்த தகவல் சசிகலாவுக்கும் கூறப்பட்டிருக்கிறது.
 
இதனால் தற்போது சசிகலா குடும்பத்தினர், விவேக் உள்ளிட்டோர் சசிகலாவை சந்திக்க முடியாமல் தவிக்கின்றனர். பெங்களூரே கதி என கிடந்த விவேக் தற்போது சென்னையில் தான் அதிகமாக இருக்கிறார். வாரத்திற்கு ஒரு முறை சென்று சசிகலாவை சந்தித்து வருகிறார்.
 
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் இது தொடர்பான தகவல் பெற்றது தான் இந்த சிக்கலுக்கு காரணம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரம் கேட்டு சிக்கலை உண்டாக்கியது கர்நாடகாவை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் தான் என்ற தகவல் வருகிறது.
 
அந்த அதிமுக பிரமுகர் இந்த செயலில் இறங்குவதற்கு காரணம் விவேக் தான் என்கிறார்கள். அந்த அதிமுக பிரமுகர் சசிகலாவை பார்க்க முதல்முறை சிறைக்கு சென்றபோது விவேக் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது முறை அவர் சசிகலாவை பார்க்க சென்றபோது, எதுக்கு இங்கே சும்மா சும்மா வறீங்க, இங்கே இனி வராதீங்க என கோபத்துடன் சொல்லி இருக்கிறார் விவேக்.
 
சசிகலா குடும்பத்துக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த அந்த அதிமுக பிரமுகரை விவேக் அப்படி பேசியதால் கடுப்பான அவர் இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை விவேக்கிற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார். விவேக்கின் கோபம் கடைசியில் சசிகலாவுக்கு பிரச்சனையாகிவிட்டது என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.