1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூலை 2020 (12:03 IST)

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறும் மார்க்கெட்டுகள்! – விளாத்திக்குளம் மார்க்கெட்டில் 44 பேருக்கு கொரோனா!

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது விளாத்திக்குளம் மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் 44 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து மக்கள் புழக்கம் அதிகமாக உள்ள மார்க்கெட் பகுதிகள் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதி மூலமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் மார்க்கெட் மூடப்பட்டது. அதை தொடர்ந்து மதுரை பரவை மார்க்கெட்டிலும் 20 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டது, மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சேலம் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளிடம் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தூத்துக்குடி விளாத்திக்குளம் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. விளாத்திக்குளம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 104 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை விளாத்திக்குளம் மார்க்கெட் முழுவதும் மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மார்க்கெட் பகுதிகள் மூலமாக கொரோனா தொற்று அபாயம் ஏற்படுவதை தவிர்க்க மாற்று வழிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.