1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 9 ஜனவரி 2017 (14:35 IST)

செல்லாக்காசு ஜெயலலிதா என்னை குறை கூறுவதா? - இப்படி பேசிய வளர்மதி

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக  அதிமுக முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பா.வளர்மதி வெளியிட்ட  காட்டமான பழைய அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
ஜெயலலிதா முதல்வரக இருந்தபோது அதிமுக வட்டாரத்தில் அதிகாரத்துடன் வலம் வந்தவர் பா.வளர்மதி. இவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. அதன்பின், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஜெ.வின் மறைவிற்கு பின் அவர் சசிகலாவின் ஆதரவாளராக மாறினார். அதைத் தொடர்ந்து அவர் தமிழ்நாடு பாடநூல் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது, ஜெயலலிதாவிற்கு எதிராக ஒரு கடுமையான அறிக்கையை அவர் வெளியிட்டிருந்தார். 
 
அதில் “எம்.ஜி.ஆரால் பெயர் வைக்கப்பட்டு அவராலேயே அரசியலில் வளர்க்கப்பட்டவள் நாள். ஜெயலலிதாவை போல், சினிமாவில் செல்லாக்காசு ஆகி அரசியலுக்கு வந்தவள் அல்ல” என காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.


 

 
மேலும், “மாக்கியவல்லிக்கும் சாணக்கியனுக்கும் அரசியலை சொல்லித்தர புறப்பட்டிருக்கும் போயஸ்கார்டன் அம்மையாரை அன்போடு அறை கூவி அழைக்கிறேன். என்னை விட எல்லாம் தெரிந்த அம்மையார், என்னோடு ஒரே மேடையில் அரசியல் பேசத் தயாரா?.. வேண்டாம்.. அதுகூட அவரின் தகுதிக்க அழகில்லை என அவர் நினைத்தால், என்னை விட எல்லாத் தகுதியும் பெற்ற அவரோடு இருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எவரையாவது ஒரே மேடையில் என்னோடு பேச அனுப்பி வைக்கத் தயாரா?.. எதற்கும் நாவடக்கம் தேவை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த அவரின் அந்த அறிக்கையை, யாரோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது. இதைக் கண்ட ஏராளமானோர் வளர்மதிக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.