வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (13:44 IST)

கல்லூரியில் மது அருந்தும் மர்ம நபர்கள்: மாணவர்கள் போராட்டம்

நேற்று நள்ளிரவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஒன்றில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து மது அருந்தி வாந்தியெடுத்துள்ளனர் இதனால் மாணவர்கள் போரட்டத்தில் குதித்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலத்தில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இக்கல்லூரிக்கான புதிய காட்டிட கட்டுமானப்பணிகள் கப்பலூரில் நடை பெற்று வருகிறது.

அதனால் திருமங்கலத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிட வளாகத்தில், தற்காலிகமாக அந்த உறுப்புக் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இந்த கல்லூரிக்கு சுற்று சுவர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்துதல் போதைப்பொருட்களை பயன்படுத்துதல் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் கல்லூரி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், பூட்டிக்கிடந்த ஆசிரியர்களின் ஓய்வு அறையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு மது குடித்து ஆட்டம் போட்டுள்ளனர். இதனால் அந்த அறை முழுவதும் உடைந்த மது பாட்டில்கள் வாந்தியுடன் நாசம் அடைந்து இருந்தது.

இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் இதைப்பார்த்து ஆவேசம் அடைந்தனர். இந்த சமூக விரோத செயலில் ஈடுபட்ட கும்பலை உடனடியாக கைது செய்யக்கோரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.