1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (08:46 IST)

முன்னாள் மேயரின் கொலைக்கு காரணம் சொத்துப்பிரச்சனையா? 3 தனிப்படைகள் விசாரணை

முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதனால் நெல்லை பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது. இந்த நிலையில் உமா மகேஸ்வரியை கொலை செய்த மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
முன்னாள் நெல்லை மேயர் உமாமகேஸ்வரி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டி என்ற பகுதியில் தனது கணவர் முருகு சந்திரன் மற்றும் பணிப்பெண் மாரி ஆகியோர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென அவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மூவரையும் பயங்கரமாக தாக்கினார். இந்த தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மூவரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் நெல்லை போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு துப்பு துலக்கி வருகின்றனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. படுகொலை நடந்த வீட்டில் உள்ள லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருப்பதால் நகைகளை கொள்ளை அடிப்பதற்காக இந்த படுகொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
 
மேலும் உமாமகேஸ்வரிக்கும் அவரது உறவினர்களுக்கும் சொத்து பிரச்சினை இருப்பதாக கூறப்படுவதால் இந்த சொத்து பிரச்சினையால் இந்த கொலை ஏற்பட்டிருக்குமோ என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் இந்த கொலை குறித்து விசாரணை செய்ய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்