வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2017 (09:32 IST)

தனிக்கட்சி தொடங்கும் நெருக்கடியில் தினகரன் - பின்னணி என்ன?

இரட்டை இலை சின்னம் கை விட்டு போய் விட்டதால் டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே தேர்தல் ஆணையம் கொடுத்து விட்டது. இனிமேல், அதிமுக என்கிற கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி - ஓபிஎஸ் அணியால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
மேலும், ஏற்கனவே இருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியையும், எடப்பாடி அணியினர் பறித்துவிட்டனர். தற்போதைக்கு தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்கள் மட்டுமே தினகரன் பக்கம் இருக்கின்றனர். எனவே, அடுத்து அவர் எடுக்கும் முடிவே அவரின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
வருகிற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கண்டிப்பாக நான் போட்டியிடுவேன் என இப்போதே அறிவித்துவிட்டார் தினகரன். ஆனால், முன்பு கொடுக்கப்பட்ட தொப்பி சின்னம் கூட இந்த முறை கிடைக்குமா என்பது தெரியாது. 
 
எனவே, அவர் புதிதாக கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல் வருவதால் சீக்கிரம் அதற்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. ஏனெனில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னரே அவருக்கு தனி சின்னம் ஒதுக்கப்படும். 
 
தற்போதுள்ள சூழ்நிலையில் அவர் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுவே வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.