வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 17 மே 2017 (15:37 IST)

தினகரனுக்கு ஜாமின் கிடைக்குமா? - நீதிமன்றத்தில் நாளை விசாரணை

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினகரன் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.


 

 
டெல்லியை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடம், இரட்டை இலை சின்னத்தை பெற தினகரன் தரப்பு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் கூறிய டெல்லி போலீசார் தினகரன், அவரது வழக்கறிஞர் மல்லிகார்ஜுனா ஆகியோரை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர். 
 
அதன்பின் தொடர்ந்து தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், தினகரனின் வழக்கறிஞர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
 
விசாரணை முடிந்து, கடந்த 1ம் தேதி டெல்லி தனி நீதிமன்றத்தில் தினகரனை போலீசாரை ஆஜர்படுத்தினர். அப்போது கடந்த 15ம் தேதி அவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். எனவே, தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் அவரது நீதிமன்ற காவலை வருகிற 29ம் தேதிவரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில், தினகரன் சார்பில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. ஒருவேளை அவருக்கு ஜாமின் கிடைத்தால், அவர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.